பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவதில் குளறுபடி- ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம்
பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவதில் இழுபறியும், குளறுபடியும் நீடிப்பதால் ரேசன் கடை ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி: பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவதில் இழுபறியும், குளறுபடியும் நீடிப்பதால் ரேசன் கடை ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, கிஸ்மிஸ் 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், கரும்பு துண்டு 2 அடி போன்றவை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரேசன் கடைகள் மூலம் இந்த பொருட்கள் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வைத்து ஒவ்வொரு பொருளாக பிளாஸ்டிக் பையில் பேக்கிங் செய்யும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது. இதை இணை பதிவாளர் அருளரசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேக்கிங் நடைபெற்ற இடத்தில் பொருட்கள் அளவு சரியாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் பேக்கிங் மிசின் வழங்க வில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அவருக்கும், ரேசன் கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இணை பதிவாளர் திட்டியதாக கூறி ரேசன் கடை ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ரேசன் கடை ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், பொங்கல் பொருட்கள் வழங்குவதில் இழுபறியும், குளறுபடியும் ஏற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் பேச்சு வார்த்தையை ஊழியர்கள் ஏற்காததால் போலீசார் ஊழியர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது.