கடைசிக் கொள்ளியும் வச்சுட்டாங்க.. முடிந்தது கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு..!
சென்னை: படித்தது மாநில அரசின் பாடத் திட்டத்தில்... காலையில் கண் விழித்து, நள்ளிரவு வரை பள்ளி, ட்யூஷன் எனப் படித்து ப்ளஸ் டூ பொதுத் தேர்வு எழுதியது மாநில அரசுப் பாடத் திட்டத்தில். 1200-க்கு 1999 வரை மதிப்புப் பெற்றதும் அதே பாடத் திட்டத்தில்தான். ஆனால் அப்படிப் பெற்ற மதிப்பெண்ணுக்கு இனி எந்த மரியாதையும் கிடையாது.
மாநில அரசு பாடத் திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத சிபிஎஸ்சி பாடப் பிரிவின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் தேர்வு பெற்றால் மட்டுமே இனி மருத்துவப் படிப்பைப் படிக்க முடியும் என்ற கொடுமையான நிலையை தெரிந்தே அனுமதித்துள்ளன தமிழக அரசும் மத்திய அரசும். நீதித் துறையும் தெரிந்தே இந்த தேர்வை கட்டாயமாக்கியுள்ளது.
கிராமப்புறங்களில் 1190 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் பல மாணவர்கள். ஏன்.. பட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இந்த அளவுக்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் பலர் நீட் எழுதவில்லை... அல்லது எழுதியும் தேர்ச்சி பெறவில்லை.
தலையில் பாறாங்கல்லைப் போட்ட அரசு
'எப்படியும் தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற்றுவிடும்' என்று பலமாக நம்பினர் இந்த மாணவர்களின் பெற்றோர்கள். அவர்கள் நம்பிக்கையில் பாறாங்கல்லைப் போட்டுவிட்டது அரசு.
இனி வரும் ஆண்டுகளும் துயரமே
இந்த ஆண்டு மட்டுமல்ல, இனி வரும் ஆண்டுகளிலும் கூட நீட் தேர்வில் எத்தனை கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்பது தெரியவில்லை. ஆக திட்டமிட்டே தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் போட்ட பாதை
இன்னொரு பக்கம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும் முழுமையாக மருத்துவக் கல்வி கிடைக்கவும் நீதிமன்றம் வழிவகுத்துக் கொடுத்துள்ளது, தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம்.
வெளிநாடுதான் வழியா
இந்த ஆண்டுதான் எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவக் கல்வி படிப்புக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஜார்ஜியா, கயானா, கிர்க்கிஸ்தான், யுக்ரைன், சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குச் சென்ற வண்ணமுள்ளனர். இப்போது நீட் கட்டாயம் என்றாகிவிட்டதால், இன்னும் சில ஆயிரம் மாணவர்கள் பயணிக்கக் கூடும்.
இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கென்றே தனி கேம்பஸ்களை இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கினாலும் ஆச்சர்யமில்லை.