இனி பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி அவசியம் – சென்னை போலீஸ்
சென்னை: சென்னையில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு கருதி ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது தொடர்பாக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னையில் உள்ள 300 பள்ளிகளைச் சேர்ந்த 350 தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
அப்போது காவல்துறையினர், "பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். பள்ளி வாயில்கள், வாகன நிறுத்தும் இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்களை அனுபவம், ஆரோக்கியத்தின் அடிப்படையில் நியமிக்க வேண்டும்.
வாகன ஓட்டுநர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் பெற்று வைத்திருக்க வேண்டும்" ஆகிய அறிவுரைகளை வழங்கினர்.இதேபோல, விடுதிப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், " விடுதிகளில் தங்க வருபவர்களிடம் கண்டிப்பாக அடையாளச் சான்றிதழ் பெற வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் தங்கினால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என காவல் துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.