நவீன ஜல்லிக்கட்டு... திமிறி ஓடும் காளைகளைக் கண்டறிய ஜிபிஎஸ்: உரிமையாளர்கள் முடிவு
மதுரை: பொங்கல் பண்டிகையொட்டி நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டின் போது திமிறி ஓடும் காளைகள் வழி தவறி காணாமல் போவதைத் தவிர்க்க தடுக்க ஜிபிஎஸ் கருவிகளை உபயோகிக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பொங்கல் வந்தாலே தமிழர் வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டிற்கான வேலைகளும் ஆரம்பமாகி விடும். ஜல்லிக்கட்டில் சமயங்களில் காளைகள் பாதை மாறி காணாமல் போவதும் நிகழ்வதுண்டு.
வேறு சில சந்தர்ப்பங்களில் வழி தவறும் காளைகள் விபத்தில் சிக்கும் அசம்பாவிதங்களும் நடை பெறுவதுண்டு. இவற்றைக் களையும் வகையில், அறிவியலின் துணைக் கொண்டு காளைகளின் பாதையை கண்காணிக்கும் ஜிபிஎஸ் வசதி இம்முறை ஜல்லிக்கட்டில் அறிமுகப் படுத்தப் பட இருக்கிறது.
விலை மதிப்பான காளைகள்....
பொங்கல் சமயங்களில் தென் தமிழகப் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் பந்தயங்களில், பங்கு பெறும் காளைகளின் விலை 75,000 ரூபாயிலிருந்து தொடங்கி 2,50,000 வரை கூட செல்கின்றது.
காணாமல் போகின்றன....
இத்தகைய காளைகள் பந்தயத்தில் பங்கு பெறும்போது சிலசமயம் திமிறிக்கொண்டு ஓடிவிடுகின்றன. அத்தைகைய சமயங்களில் இவற்றைக் கண்டுபிடிக்கப் பல நாட்களாகின்றன. சில சந்தர்ப்பங்களில் இவை மீண்டும் கண்டுபிடிக்கப்படாமலே கூட போய்விடுகின்றன.
ஜிபிஎஸ் வசதி....
அதிகவிலை கொடுத்து வாங்கி ஆசையுடன் வளர்க்கும் காளைகளை இழக்க விரும்பாத உரிமையாளர்கள் சிலர் தொழில்நுட்ப உதவியுடன் ஜிபிஎஸ் பாதுகாப்பு முறையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஜிபிஎஸ் கருவிகள்....
இதன்படி, இம்முறை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் பந்தயத்தில் சிவகங்கை மற்றும் திருச்சி பகுதியைச் சேர்ந்த சில உரிமையாளர்கள் தங்கள் காளைகளின் கழுத்தில் ஜிபிஎஸ் கருவிகளைக் கட்டிவிட முடிவு செய்துள்ளனர்.
சோதனை முயற்சியாக....
இது குறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்புக் குழுவின் இணை செயலாளரான டி.ராஜேஷ் கூறுகையில், ‘தாங்கள் மொத்தம் 8 கருவிகளை 8,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் இந்தமுறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவற்றை முயற்சி செய்து பார்க்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விரிவு....
மேலும், இவை தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் மற்ற உரிமையாளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தக் காளைகளை ஏற்றிவரும் குளிர்சாதன வண்டிகளில் கூட இந்தக் கருவியின் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்படலாம் என்றும் ராஜேஷ் கூறியுள்ளார்.
உரிய சோதனைகள்....
கால்நடை வளர்ப்புத்துறை அதிகாரிகள் இதற்கு அனுமதி கொடுக்கும் முன்னர் இத்தகைய கருவிகள் விலங்குகளின் நடத்தையை மாற்றுகின்றனவா என்பதுவும் பரிசோதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்ப்புகளை மீறி....
சமீப காலங்களில் விலங்கு உரிமை ஆர்வலர்கள் விலங்குகளை துன்புறுத்தும் வகையில் நடத்தப் படும் இத்தகையப் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும் தொடர்ந்து வாதிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.