எஸ்.எஸ்.எல்.சி கணித வினாத்தாளில் எழுத்துப்பிழை- “அட்டெண்ட்” செய்திருந்தால் மதிப்பெண்!
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எழுத்துப்பிழையுடன் கேட்கப்பட்டிருந்த கேள்வி இடம்பெற்றிருந்ததால் அதனை எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத் தேர்வு கடந்த வாரத்துடன் முடிந்தது. 16 ஆம் தேதி முதல் விடைத் தாள் திருத்தும் பணி தமிழகம் தொடங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு மையங்களில் விடைத் தாள் திருத்தப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் தொடங்கியது. இந்நிலையில் கணிதம் வினாத் தாளில் இடம் பெற்றிருந்த 47 ஆவது கேள்விக்கு வரைபடம் வரைந்து அதன் மூலம் சமன்பாடு கண்டுபிடிக்க வேண்டும். இது 10 மதிப்பெண் கேள்வியாகும். இந்தக் கேள்வியில் எழுத்துப் பிழை இருந்தது.
இதையடுத்து அந்த சமன்பாட்டை மாணவ, மாணவியர் எழுத முயன்றிருந்தால் 4 மதிப்பெண் அளிக்க வேண்டும் எனத் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் மாணவ, மாணவியர் வரைபடம் வரைந்திருந்தால் மட்டுமே அதற்கு 6 மதிப்பெண் அளிக்கப்படும் எனவும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.