வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து நகை பறிக்க முயற்சி.. பட்டதாரி வாலிபர், பெண் இன்ஜினியர் கைது
நூதன முறையில் திருட்டில் ஈடுபட முயன்ற பட்டதாரி வாலிபரும், பெண் இன்ஜினியரும் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்: வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து நகையை பறிக்க முயன்ற பெண் இன்ஜினியரும், எம்பிஏ பட்டதாரி வாலிபரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.
ஆந்திர மாநிலம் இந்துப்பூரை சேர்ந்தவர் சுவேதா (24). இவரும் ஓசூர் அருகே பாகலூரைச் சேர்ந்த எதிஷ் (23) என்பவரும் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுவேதா இன்ஜினியரிங் முடித்துள்ளார். எதிஷ் இன்ஜினியரிங் பட்டதாரி.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (48). தனியார் கல்லூரி யில் அலுவலராக பணியாற்றுகிறார். இவரது மனைவி லட்சுமி (45), நேற்று முன்தினம் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சுவேதாவும், எதிஷும் லட்சுமியிடம், வீடு வாடகைக்கு விடுவதாக போடு மாட்டியுள்ளீர்கள் என பேச்சு கொடுத்துள்ளனர்.
மேலும், அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். சமையல் அறைக்குள் தண்ணீர் எடுக்க லட்சுமி சென்ற போது, பின்தொடர்ந்து சென்ற இருவரும் லட்சுமியின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத லட்சுமி, அவர்களிடம் இருந்து போராடி விடுபட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்து சத்தம் போட்டார். இதையறிந்த அருகில் இருந்தவர்கள் உடனே சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் 2 பேரையும் ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். வீடு வாடகைக்கு கேட்பது போல் நகை கொள்ளையடி முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.