பிரிந்து போன 2வது மனைவி .. கோபமான தாத்தா.. 10 மாத பேத்தியை அடித்தே கொன்ற கொடூரம்
10 மாத குழந்தையை செங்கல்லால் அடித்து கொன்ற தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்
பொள்ளாச்சி: தாத்தாவின் 2-வது மனைவி பிரிஞ்சி போய்ட்டாராம்.. அதுக்காக 10 மாச பேத்தியை செங்கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார் இந்த தாத்தா!
பொள்ளாச்சி அருகே கருப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது முதல் மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார்.
அதனால் சக்தி கனி என்பவரை 2-வது கல்யாணம் செய்து கொண்டார். அந்த மனைவியுடன் மகன் குமாருடன் வசித்து வந்துள்ளார். குமாருக்கு முத்துமாலை என்ற மனைவியும், 10 மாதத்தில் தர்ஷினி என்ற குழந்தையும் உள்ளது.
இதனிடையே, செல்வராஜை விட்டு அவரது 2-வது மனைவியும் கோபித்து கொண்டு கொஞ்ச நாளைக்கு முன்னாடி பிரிந்து சென்று விட்டாராம். இதனால் மகன், மருமகளிடம் செல்வராஜ் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மருமகள் முத்துமாலை குழந்தையுடன் வீட்டில் இருக்கும்போது, பேத்தியை தூக்கி கொண்டு செல்வராஜ் பைக்கில் கிளம்பி போயுள்ளார். ஆனால் ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரவே இல்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் பயந்துபோய் கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை தேடினர். மேலும் அவரது செல்போன் சிக்னலை வைத்து, ரயில்வே ஸ்டேஷனில் அவர் இருப்பதையும் கண்டுபிடித்தனர். போலீசார் உடனடியாக விரைந்து செல்வராஜை மடக்கி பிடித்துவிட்டனர்.
குழந்தை எங்கே என்று கேட்டதற்கு, "செங்கல்லால் அடித்து கொன்றுவிட்டேன்.. ஒத்தக்கால்மண்டபம்-தொப்பம்பாளையம் ஜங்ஷனில்தான் குழந்தையைக் கொலை செய்தேன். ஒத்தக்கால் மண்டபம் பார்க் பக்கம் இருக்கிற பேக்கரி பின்னாடி குழந்தை உடலை வீசிவிட்டேன். 2-வது மனைவி என்னை விட்டு பிரிய காரணமே மகனும், மருமகளும்தான், அதனால்தான் பேத்தியை கொன்றேன்"என்று செல்வராஜ் போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, செல்வராஜை போலீசார் கைது செய்து, தர்ஷினியின் சடலத்தையும் மீட்டனர். 2-வதுபொண்டாட்டி போன கோபத்தில், 10 மாத குழந்தையை தாத்தா அடித்து கொன்றது பொள்ளாச்சியை உலுக்கி உள்ளது.