இந்தியாவிலேயே முதன்முறையாக... மகளுக்காக ‘பேத்தி’யைப் பெற்றெடுத்த தாய்!
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் பெற்ற தாயே, தனது மகளுக்காக வாடகைத் தாயாக மாறி குழந்தை பெற்றுத் தந்துள்ளார்.
சென்னை தியாகராய நகரை சேர்ந்த பட்டதாரி தம்பதி ஒன்று குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளனர். திருமணமான புதிதிலேயே கருவுற்ற மனைவிக்கு, 7 மாதத்தில் நஞ்சு பிரிந்து கடும் உதிரப்போக்கு ஏற்பட்டது. இதனால், இறந்த குழந்தையோடு அப்பெண்ணின் கர்ப்பப்பையும் மருத்துவர்கள் நீக்கி விட்டனர்.
இதனால, அத்தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை செய்தும், பலனில்லை.
இறுதியாக வடபழனியில் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் அவர்கள். அங்கு அவர்களைச் சோதித்த டாக்டர்கள் காமராஜ், ஜெயராணி ஆகியோர் ‘‘வாடகை தாய்க்காக நீங்கள் அலைவது கஷ்டம். யாராவது பெண் கிடைத்தால் கூட அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அதோடு அவர்களை பராமரித்து சமாளிப்பதும் கஷ்டம். எனவே உறவு பெண்கள் யாராவது வாடகை தாயாக வந்தால் மிகவும் நல்லது'' எனத் தெரிவித்துள்ளனர்.
டாக்டர்கள் அளித்த கவுன்சிலிங்கைத் தொடர்ந்து, அப்பெண்ணின் 61 வயது தாயாரே மகளுக்காக வாடகைத் தாயாக மாற சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தாயாரின் உடல் நிலை பரிசோதிக்கப் பட்டது. அப்போது மாதவிடாய் நின்று போயிருந்த போதும், அவரது கர்ப்பப்பை நன்றாக இருப்பது தெரிய வந்தது.
டாக்டர்கள் மருந்து மூலம் மாதவிடாயை வரவழைத்து, கர்ப்பப்பை கருவை சுமப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மருமகனின் விந்தணுவும், மகளின் கருமுட்டையும் சேர்த்து கருவாக்கம் செய்து தாயின் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது.
எதிர்பார்த்தபடியே கரு நல்ல நிலையில் வளர்ந்தது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த லட்சுமியின் தாய் கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தையை பெற்று மகளுக்கு பரிசளித்தார்.
மகளுக்காக தாயே வாடகை தாயாக மாறி இருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் காமராஜ்-ஜெயராணி காமராஜ் ஆகியோர் கூறுகையில்,
மருத்துவ உலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மகளுக்காக தாய் செய்த தியாகம் அளவிட முடியாது. தாயே வாடகை தாயாக மாறி இருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறை.
பலரும் பலவிதமாக யோசிப்பார்கள். ஆனால் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து பெற்ற மகளுக்காக வாடகை தாயாக மாறி விஞ்ஞான சாதனை புரிந்த இந்த பெண் பாராட்டுக்குரியவர். வருகிற 8 ம் தேதி நடைபெறும் மகளிர் தினவிழாவில் அந்த பெண்ணை கவுரவிக்க இருக்கிறோம். 2.7 கிலோ எடையுடன் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது என்றனர்.