ஆற்றைக் கடந்த தாத்தா பலி: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேரனைத் தேடும் பணி தீவிரம்
சீர்காழி: சீர்காழி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தாத்தாவும், பேரனும் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் முதியவர் உயிரிழந்தார். உடன் சென்ற அவரது பேரனை தேடும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்களும், உள்ளூர் இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழியை அடுத்த வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த மணி, தனது பேரன் கோபிநாத்தை அழைத்து கொண்டு மாட்டிற்கு புல் அறுக்க சென்றுள்ளார். அதே பகுதியிலுள்ள மண்ணியாற்றை கடந்து செல்லும் போது ஆற்றில் ஏற்றபட்டிருந்த வெள்ள பெருக்கில் இருவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர், இருவரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மணியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து கோபிநாத்தைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.