காதலித்த பேத்தி மீது ஆத்திரம்.. கழுத்தை அறுத்துக் கொன்ற ஜாதிவெறி பிடித்த தாத்தா
காட்டுமன்னார்குடி: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே மாணவனை காதலித்த குற்றத்திற்காக சொந்த பேத்தி என்றும் பாராமல் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்று விட்டு போலீஸில் சரணடைந்துள்ளார் முதியவர் ஒருவர்.
காட்டுமன்னார்குடியை அடுத்த சோழத்தரம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய ரமணிதேவி. 22 வயதான இவர் காட்டுமன்னார்குடி எம்ஆர்கே கல்லூரியில் முதுகலைபட்டம் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் திண்டிவனம் அருகே உள்ள கருமபானையம் கிராமத்தை சேர்ந்த சபாபதி (24) என்பவரை காதலித்து வந்தார் ரமணி தேவி.
இருவரும் சமீபத்தில் வீட்டை விட்டு ஓடி விட்டனர். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது காட்டுமன்னார்குடி கோர்ட்டில் இருவரும் ஆஜராகினர். அப்போது தான் பெற்றோருடன் செல்வதாக கூறினார் தேவி. இதையடுத்து பெற்றோருடன் அவர் செல்ல கோர்ட் அனுமதித்தது. ஆனால் வீட்டுக்குத் திரும்பியதும் சபாபதியுடன் மீண்டும் காதலைப் புதுப்பித்துள்ளார் தேவி.
இதை அறிந்த அவரது தாத்தா வீராசாமி (66) தனது பேத்தியை இன்று காலை கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக கொன்றார். அதன் பின்னர் சோழத்தரம் காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.