சொத்தைப் பிரித்துத் தராத பாட்டி.. அம்மிக் கல்லைத் தலையில் போட்டுக் கொன்ற பேரன்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சொத்தைப் பிரித்துத் தராத காரணத்தால், ஆத்திரத்தில் அம்மிக்கல்லைத் தலையில் போட்டு பாட்டியைக் கொலை செய்த பேரனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகிலுள்ள ஆவாரங்காட்டு வலசில் உள்ள லோகியா வீதியை சேர்ந்தவர் சின்னம்மாள் (85) என்பவரது மகள் பருவதம் (57). கணவனுடன் வெப்படையில் வசித்து வரும் பருவதத்தின் பேரன் சேகர் (35). இவர் அருகிலுள்ள நத்தக்கடையூரில் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி சின்னம்மாள் வீட்டிற்கு சென்ற சேகர், ஈஞ்சம்பள்ளி பருவதம்மாள் வீட்டருகே உள்ள பாட்டியின் வீட்டு நிலத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு அவரிடம் கேட்டுள்ளார்.
இதனால் பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேகர், அருகில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து பாட்டியின் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னம்மாளை உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மொடக்குறிச்சி போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சேகரைக் கைது செய்தனர்.
சம்பவத்தின் போது சேகர் மது போதையில் இருந்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.