ஆளில்லா விமானம் இயக்கிய பார்த்தசாரதி இறந்தது எப்படி? சகாயம் கிளப்பிய சந்தேகம்!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள சகாயம் குழுவிற்கு பறக்கும் விமானம் மூலம் படங்கள் எடுத்துக்கொடுத்து உதவிய ‘ப்ளைட்' பார்த்தசாரதி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 11வது கட்ட விசாரணையை கடந்த 7ஆம் தேதி துவக்கினார். விசாரணையின் ஏழாவது நாளாக திருவாதவூர், நரசிங்கம்பட்டி, சிவலிங்கம் ஆகிய ஊர்களை சேர்ந்த விஏஓக்களை அழைத்து அரசு புறம்போக்கு நிலங்களில் குவாரி ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக நேற்று விசாரணை நடத்தினார். கீழவளவு, கீழையூர், மேலவளவு ஆகிய கிராம நிர்வாக அலுவலரிடமும் விசாரித்தார். இதேபோல் பல்வேறு துறை அதிகாரிகளிடம் சகாயம் வாக்குமூலம் பெற்றார்.
குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக ஒரு தனியார் மருத்துவமனையிடம் அறிக்கை கேட்டிருந்தார். அந்த மருத்துவமனையில் இருந்து யாரும் வரவில்லை. இதனால் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தொலைபேசி இணைப்பு
கிரானைட் குவாரிகளுக்கு தொலைபேசி இணைப்பு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதா என விளக்கம் அளிக்குமாறு பிஎஸ்என்எல் மண்டல பொதுமேலாளருக்கு சகாயம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதையடுத்து, பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ராஜம் உள்ளிட்ட 3 அதிகாரிகள் சகாயம் முன்பு திங்கட்கிழமையன்று ஆஜரானார்கள். சகாயம் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர்.
பார்த்தசாரதி மரணம்
இந்த பரபரப்புக்கு இடையே ஆளில்லா விமானத்தை இயக்கிய பார்த்தசாரதி கடந்த 10ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மரணத்திற்கான காரணம் குறித்து உடனடியாக விசாரிக்க சகாயம் உத்தரவிட்டிருந்தார். இந்த விசாரணை பற்றி போலீஸ் உதவி கமிஷனர் சசிமோகன், சகாயம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
யார் இந்த பார்த்தசாரதி
சிவகங்கை மாவட்டம் முப்பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் படித்த இவர் மதுரையில் பிலிப்ஸ் கம்பெனியின் சர்வீஸ் சென்டர் வைத்து வேலை செய்து வந்தார். அப்போதே பல கண்டுபிடிப்புகளை செய்த அவர், தொலைபேசி ஒலித்தால் டிவி தானாக மியூட் ஆகும் சர்க்யூட் கண்டுபிடித்துள்ளார்.
விமானக் காதலர்
விமானத்தின் மீதான தீராத காதல்தான் ஏகப்பட்ட பல குட்டி விமானங்களை கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது. இதன் காரணமாகவே மூத்த மகள் பூர்ணாவை விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்த்தனர். இரண்டாவது மகள் ஆதிலட்சுமியை ஏரோ நாட்டிகள் என்ஜீனியரிங் படிக்க வைத்துள்ளார்.
விபத்து எப்படி?
காரைக்குடியில் பொறியியல் படிக்கும் மாணவனுக்கு ஏரோடைனமிக் குறித்த புராஜெக்ட் செய்து கொடுத்துள்ளார் பார்த்தசாரதி. விடிய விடிய தூங்காமல், வேலை செய்துவிட்டு அதிகாலை 5 மணிக்கு அந்த மாணவரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு வரும்போதுதான் விபத்து நடந்துள்ளது.
யார் அந்த 5 பேர்
விபத்து நடந்த நேரம் அதிகாலை 5.21 மணி. விபத்து நடந்த இடத்தில் இருந்து பார்த்தசாரதியின் வீடு 200 மீட்டர் தொலைவில்தான் இருந்துள்ளது. அடுத்த 4 நிமிடத்திற்குள் 5 பேர் பார்த்தசாரதியின் வீட்டிற்குப் போய் தகவல் சொல்லியுள்ளனர்.
மர்ம மரணம்
அவரது மகள் பூர்ணா விபத்து நடந்த இடத்திற்குப் போய் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஒரே ஒரு வார்த்தை மட்டுமே பேசிய பார்த்தசாரதி போகும் வழியிலேயே உயிரிழந்து விட்டார் பார்த்தசாரதி. இதுதான் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பார்த்தசாரதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய சகாயம், காவல்துறையினர் மரணம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சகாயத்தின் 11வது கட்ட விசாரணை திங்கட்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணையை சகாயம் தொடங்கும் முன்னர் பார்த்தசாரதியின் மரணத்திற்கு விடை கிடைக்குமா?