சகாயம் அறிக்கையை என்ன பண்ணப் போறீங்க.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் கேள்வி!
கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி தாக்கல் செய்த அறிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது பற்றி ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி இரு ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை நடத்திய சகாயம் ஐஏஎஸ் ஹைகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது பற்றி ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்த போது கிரானைட் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி புகார்கள் வந்தன. இதனையடுத்து அவர் நடத்திய ஆய்வில் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை அறிக்கையாக தயாரித்தார் சகாயம். இதனையடுத்து மேல் மட்ட அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியராக சகாயம் கோ ஆப் டெக்ஸ் நிறுவன இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கேயும் நேர்மையாக இருக்கவே அவரை அறிவியல் நகரத்தின் துணை தலைவராக தூக்கியடித்தது அதிமுக அரசு.
டிராபிக் ராமசாமி வழக்கு
இந்த சூழ்நிலையில்தான் மதுரையில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்படுவதாகவும், தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுவதாகவும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்கடந்த 2014ல் சமூக ஆர்வலரான டிராபிக் ராம சாமி சென்னை உயர் நீதிமன் றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
சகாயம் குழு விசாரணை
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி 21 கட்டமாக விசாரணை நடத்திய சகாயம், 2015 நவம்பர் 23ல் தனது அறிக்கையை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்தார்.
ரூ. 1 லட்சத்து 16ஆயிரம் கோடி முறைகேடு
சகாயம் தனது அறிக்கையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ. ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, முறைகேட்டுக்கு உதவி புரிந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்திருந்தார்.
உயர்நீதிமன்றம் விசாரணை
இந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, பதில் மனு தாக்கல் செய்ய அரசு வக்கீல்கள் காலஅவகாசம் கேட்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மேலும் அவகாசம்
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துக்குமாரசாமி, பதில் அறிக்கை தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சகாயம் அறிக்கை தமிழக அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டது. எனவே இதுதொடர்பாக ஒருங்கிணைந்த விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம் வேண்டும் என்றார்.
மதிப்பீட்டில் தவறு
இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘கடந்த 17 ஆண்டுகளில் கிரானைட் குவாரிகள் மூலம் ரூ. 52 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது மதிப்பீட்டில் ரூ. ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அவரது மதிப்பீடு தவறானது. அவர் பிற துறைகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஆய்வு நடத்தியுள்ளார்.
துல்லியமான விசாரணை
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை நியமித்து மீண்டும் துல்லியமாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையான மதிப்பீடு தெரியும். இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யவுள்ளோம். அதுதொடர்பாகவும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
6 வாரத்தில் அறிக்கை
இதையடுத்து நீதிபதிகள், ‘ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் அறிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது குறித்து 6 வார காலத்திற்குள் ஒருங்கிணைந்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.