கிரானைட் முறைகேடு: சகாயம் குழுவில் இணைந்தார் துணை ஆட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினி
மதுரை: கிரானைட் முறைகேட்டை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவில் பெண் துணை ஆட்சியர் கீர்த்தி பிரியதர்ஷி புதிதாக இணைந்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சகாயம் குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சகாயம் இதுவரை 10 கட்ட விசாரணையை முடித்துள்ளார். தற்போது அறிக்கை தயாரிக்கும் பணியில் விசாரணை குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.சகாயம் குழுவில் ஏற்கெனவே 6 பேர் செயல்பட்டனர்.
இறுதி அறிக்கையை தயாரிக்க சகாயம் கேட்டுக்கொண்டதன்பேரில், மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை, முன்னாள் தணிக்கைத் துறை உதவி இயக்குநர் ராஜசேகரன், தூத்துக்குடி மாவட்ட அரசு சிறப்பு திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர் ராஜாராம், கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேலு ஆகியோர் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர்.
பொறுப்பேற்பதில் சிக்கல்
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் நில எடுப்பு பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் பணியாற்றிய முருகையாவும் சகாயம் குழுவில் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். மதுரையிலுள்ள சகாயம் அலுவலகத்துக்கும் முருகையா வந்து சென்றார். இன்னும் பணியை தொடங்காத நிலையில், முருகையாவுக்கு பொதுத் துறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முருகையா சகாயம் குழுவில் இடம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
பெண் துணை ஆட்சியர்
கிரானைட் முறைகேட்டை விசாரித்து வரும் சகாயம் குழுவில் புதிய பெண் அதிகாரிகீர்த்தி பிரியதர்ஷினி.கிரானைட் முறைகேட்டை வி...
Posted by Lawyer Palaniswamy on Sunday, April 5, 2015
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நில எடுப்பு பிரிவில் துணை ஆட்சியராக பணியாற்றும் கீர்த்தி பிரியதர்ஷினி சகாயம் குழுவில் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே மதுரை கூடுதல் கலெக்டராக (பயிற்சி) பணியாற்றினார். அதன் பின்னர் சிவகாசி ஆர்.டிஓ.வாக பொறுப்பேற்றார். அங்கு பட்டாசு தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடித்து மீட்டார். அப்பகுதியில் மணல் திருட்டை தடுத்து நிறுத்தினார். திருட்டு வாகன பதிவுகளில் நடந்த குளறுபடிகளை கண்டுபிடித்த அவர், பின்னர் நெல்லைக்கு மாற்றப்பட்டார்.
11வது கட்ட விசாரணை
இதனிடையே அடுத்த வாரம் மதுரைக்கு வரும் சகாயம், தனது 11வதுகட்ட விசாரணையை தொடங்குகிறார். தேவைப்பட்டால் முறைகேடு நடந்த கிரானைட் குவாரிகள், தொழிற்சாலைகளை அவர் மீண்டும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வார்.