கனிம வள அதிகாரியிடம் சகாயம் விசாரணை: தாமதப்படுத்திய பவர்கட்…
மதுரை: கிரானைட் குவாரிகள் முறைகேடு பற்றி விசாரணை மேற்கொண்டுள்ள சட்ட ஆணையர் சகாயத்திற்கு என்னென்ன இடைஞ்சல்களை தரவேண்டும் அத்தனையும் கொடுத்து வருகின்றனர். கொலை மிரட்டல் தொடங்கி பவர் கட் வரை தொந்தரவுகள் தொடர்ந்தாலும் அசராத சகாயம் சாட்டையை சுழற்றி வருகிறார்.
கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில், அறிவியல் துணை நகர இயக்குநர் சகாயம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மதுரையில் முதற்கட்ட விசாரணையை துவக்கினார். அப்போது 109 மனுக்களை பெற்றார். மீண்டு இரண்டாம் கட்ட விசாரணையை கடந்த 15ம் தேதி துவக்கினார்.
இதுவரை பொதுமக்களிடம் இருந்து 259 மனுக்களை பெற்றுள்ளார். அதில் கொலைமிரட்டல் மனு முக்கியமானதாகும். இந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்ட புகார்கள், முறைகேடுகள், விதிமீறல்கள், அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட, அவர், விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகுமாறு, கனிமவளத்துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினாருக்கு சகாயம் சம்மன் அனுப்பி வரவழைத்தார்.
குவிந்த மனுக்கள்
நில அபகரிப்பு, பஞ்சமி நில ஆக்கிரமிப்பு, நீர் ஆதாரங்களுக்கு ஏற்பட்ட சேதம், நரபலி, மோசடி, மிரட்டல், ஜாங்கிட்நகர் வீட்டு மனைகள் அபகரிப்பு, செம்மண் குவாரி என மனுக்கள் பிரிக்கப்பட்டன. இதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். பெரியளவில் குற்றச்சாட்டிற்குள்ளான குவாரிகளை இன்று அல்லது நாளை நேரில் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.
திடீர் பவர் கட்
சட்ட ஆணையர் சகாயம், மதுரை கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள பூமாலை வணிக வளாகத்தில் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று காலை 10 மணிக்கு விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முன்னறிவிப்பின்றி திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. சிறிதுநேரத்தில் வந்து விடும் என எதிர்பார்த்தும் மின்சாரம் வரவில்லை. விசாரணை அலுவலகம் யூபிஎஸ்சில் இயங்கியதால், போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் சகாயம் விசாரணையை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதியத்திற்கு மேல் மின்சாரம் வந்தவுடன் விசாரணையை துவக்கினார் சகாயம். இது விதியா, சதியா என்பது மின்துறையினருக்கே வெளிச்சம்.
அடாவடி பி.ஆர்.பி
திருமோகூரை சேர்ந்த வேல்முருகன் கொடுத்த மனுவில், ‘‘எனக்கு 4 ஏக்கர் 50 சென்ட் நிலம் இருந்தது. அதை பிஆர்பி நிறுவனத்தார் விலைக்கு கேட்டனர். அதை எனது தந்தை ராக்கு சேர்வை தர மறுத்தார். அதனால் எங்கள் நிலத்தில் கற்களை கொண்டு வந்து கொட்டியதால் மன விரக்தியில் தந்தை மரணம் அடைந்தார். பின்னர் என்னை மிரட்டி ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கு நிலத்தை பேரம் பேசி, ரூ.50 லட்சம் மட்டும் கொடுத்தனர். நிலம் முழுவதையும் ஏமாற்றி வாங்கி விட்டனர். நான் வாங்கிய பணத்தை திரும்ப தருகிறேன். எனக்கு நிலத்தை மீட்டு தர வேண்டும்,'' என தெரிவித்திருந்தார்.
259 மனுக்கள்
இதே போல் பலர் குவாரி உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு கூறி மனு கொடுத்தனர். நேற்று மட்டும் 30 மனுக்களை சகாயம் பெற்றார். இதுவரை மொத்தம் 259 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது அரசுத்துறை அதிகாரிகளிடம் சகாயம் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் மேலும் பல தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வி.ஏ.ஓக்களிடம் விசாரணை
முதல் கட்டமாக, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், வருவாய்த்துறை ஆர்டிஓ செந்தில்குமாரி, தாசில்தார் மணி மாறன் மற்றும் 10 விஏஓக்களிடம் சகாயம் விசாரணை நடத்தினார். அவர்களிடம் இருந்து முக்கிய கோப்புகளையும் பெற்றார்.
அதிகாரிக்கு சம்மன்
விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகுமாறு, கனிமவளத்துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினாருக்கு சகாயம் சம்மன் அனுப்பி இருந்தார். நேற்று மாலை 4.30 மணிக்கு அவர் விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் புவியியலர் விஜயராகவன் இருந்தார். மாவட்டத்தில் எத்தனை கிரானைட் குவாரிகள் உள்ளன, இயங்கி கொண்டிருப்பவை எத்தனை, முறைகேடு நடந்த குவாரிகள் எத்தனை, ஒவ்வொரு குவாரிக்கும் கிரானைட் கற்கள் எத்தனை கியூபிக் மீட்டர் வெட்ட அனுமதி கொடுக்கப்பட்டது, அனுமதியை மீறி எவ்வளவு கியூபிக் மீட்டர் கிரானைட் கற்கள் வெட்டப்பட்டன.
முறைகேடுகள் விசாரணை
இதன் மீது குற்ற நடவடிக்கை மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா, முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிகளில் இருந்து மீட்கப்பட்ட கிரானைட் கற்கள் எவ்வளவு, குவாரி உரிமையாளர்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டதா, அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, முறைகேட்டால் எத்தனை குவாரி உரிமம் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து உதவி இயக்குநரிடம், சகாயம் விசாரித்தார்.
ஆவணங்கள் பெற்ற சகாயம்
விதியை மீறி அரசு புறம்போக்கு நிலம், கண்மாய், ஊருணி, மலைகள், ஆக்கிரமிப்பு செய்து அந்த பகுதியில் எவ்வளவு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், தற்போது வழக்கின் நிலை என பல்வேறு கேள்விகளை கேட்டு துருவி, துருவி விசாரணை நடத்தினார். இதற்கான ஆவணங்களையும் பெற்றார்.
ரூ.13 ஆயிரம் கோடி
மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. இதை குவாரி உரிமையாளர்களிடம் அபராதமாக வசூலிக்க முடிவு செய்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கிரானைட் நிறுவனம் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி விளக்கமளித்தனர். அபராதம் குறித்து இறுதி செய்திருப்பதால் உரிமையாளர்கள் ஆஜராக 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்று பத்து குவாரி உரிமையாளர்கள் ஆஜராகின்றனர். இவர்களிடம் கலெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்துகிறார்.