கிரானைட் ஊழல்: 13000 பக்க ஆவணங்களை கொடுத்த காவல்துறை: மே 22ல் சகாயம் அறிக்கை தாக்கல்
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து மே 22ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ் சகாயம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தினசரி 10 மணி நேரத்துக்கும் மேல் சகாயத்தின் நேரடி பார்வையில் 10 அலுவலர்கள் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனராம்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விசாரணை செய்து வருகிறார். இதுவரை 12 கட்ட விசாரணையை முடித்துள்ள அவர் தற்போது 13வது கட்டமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார். மே 22ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
காவல்துறை, டாமின் உள்ளிட்ட சில துறைகளில் இருந்து சகாயம் கேட்ட விவரங்கள் அளிக்கப்படவில்லை என்பதால் அறிக்கை தயாரிக்கும் பணி தாமதமானது. தற்போது பல்வேறு துறைகளும் அறிக்கை அளித்துவிட்டன.
டாமின் அதிகாரிகளிடம் விசாரணை
டாமின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து மேலூர் பகுதியில் பணியாற்றும் டாமின் அதிகாரிகளிடம் சகாயம் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.
குவாரி குற்றவழக்குகள்
1994 முதல் 2012 வரை கிரானைட் குவாரிகள் மீது போடப்பட்ட வழக்குகள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சகாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதன்படி குவாரிகளில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் மற்றும் குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே அளித்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
13000 பக்க ஆவணங்கள்
இந்த நிலையில் சகாயம் நேற்று காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தனது முகாம் அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரியப்பன் தலைமையில் போலீசார், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப் பத்திரிகைகளை எடுத்து வந்தனர்.
13 ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட அந்த ஆவணங்களை, ஒரு பெட்டியில் எடுத்து வந்த போலீசார் அதை சகாயத்திடம் தாக்கல் செய்தனர்.
சுகாதாரத்துறை அறிக்கை
இதேபோன்று குவாரிகளால் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் இந்த தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சகாயம், சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் செந்தில், அந்த அறிக்கையை சகாயத்திடம் வழங்கி விளக்கம் அளித்தார்.
தயாராகும் இறுதி அறிக்கை
அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. சில முக்கிய விவரங்கள் இணைக்கும் பணி நடைபெறுகிறது. போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள முக்கிய விபரங்களை, சகாயம் ஆய்வு செய்து தனது இறுதி அறிக்கையில் சேர்க்க திட்டமிட்டு உள்ளார்.
பணியில் 10 அலுவலர்கள்
சகாயத்தின் நேரடி பார்வையில் தினசரி 10 மணி நேரத்துக்கும் மேல் 10 அலுவலர்கள் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மே 22ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆய்வில் கிடைத்த விவரங்கள், பல்வேறு துறைகள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சகாயம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.