கிரானைட் முறைகேடு: பிஆர்பி விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்பு
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு 26ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் விசாரணைக்கு வர உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இதுவரை 98 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மதுரை கீழவளவு, கீழையூர் பகுதிகளில் பட்டா நிலங்களில் பிஆர்பி கிரானைட்ஸ் பங்குதாரர் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ சிவராமன் சகோதரர் சகாதேவன் ஆகியோர் பதுக்கிய கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா 2013ல் இரு வழக்குகளை தாக்கல் செய்தார்.
இந்த 2 வழக்குகளும், குவாரி அதிபர் ராம.சகாதேவன் மீதான ஒரு வழக்கும் மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி முன்பு 29.3.2016ல் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் பி.ஆர்.பழனிச்சாமி, சுரேஷ்குமார், ராம.சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி உத்தரவிட்டார்.
மாஜித்திரேட் உத்தரவு
மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி உத்தரவு பலருக்கும் அதிர்ச்சியளித்தது. கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் கிரானைட் கற்களை குவாரிக்கு வெளியே பட்டா நிலங்களில் அனுமதியின்றி வைத்திருந்தால், மாவட்ட ஆட்சியர் ரூ.25 ஆயிரம் அபராதம் மட்டும் விதிக்கலாம்.
உரிமம் பெறாதவர்கள் கிரானைட் கற்களை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றால் ஓராண்டு சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க முடியும்.
நீதிமன்ற மோசடி
இந்த வழக்கை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் இந்த வழக்கை தாக்கல் செய்தபோது மாவட்ட ஆட்சியராக இல்லை. அப்படியுள்ள நிலையில் ஆட்சியர் என்ற முறையில் இந்த வழக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தை அவர் மோசடி செய்துள்ளார்.
பிஆர் பழனிச்சாமி விடுதலை
அதோடு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அவருக்கு பல்வேறு பணிகள் இருப்பதாக பொய்யான காரணங்களை கூறி அவர் ஆஜராகாமல் இருக்க அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் உத்தரவு பெற்றுள்ளனர். மேற்கண்ட இரு காரணங்களால் இவ்விரு வழக்குகளிலும் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
அன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை
மாவட்ட ஆட்சியராக இல்லாமல் ஆட்சியர் என்ற முறையில் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றிய ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா, அவருக்கு உடந்தையாக இருந்த அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் இபிகோ 181, 182, 193, 199 பிரிவுகளின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். இதனால் இவர்கள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 197 (1பி) பிரிவின் படி அரசின் முன் அனுமதி பெற்று குற்றவழக்கு தொடர நீதிமன்ற தலைமை எழுத்தருக்கு உத்தரவிடப்படுகிறது என மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.
மகேந்திரபூபதி சஸ்பெண்ட்
நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உத்தரவு தொடர்பாக மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத் துக்கு மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மகேந்திரபூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆட்சியர் அப்பீல்
இந்நிலையில் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் சார்பில் 2 மேல் முறையீட்டு மனுக்கள் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மேல் முறை யீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக நீதிபதி பி.தேவதாஸ் முன்பு விவாதம் நடைபெற்றது.
நீதிபதி உத்தரவு
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தனி நபர் வழக்குகளில் கீழமை நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து நேரடியாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என உயர் நீதிமன்ற முழு அமர்வும், உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகளை மதுரை மாவட்ட ஆட்சியர் தனி நபர் வழக்காகவே மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 26ல் விசாரணை
இதனால் அந்த வழக்கில் மேலூர் நடுவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம். இதனால் 2 மேல்முறையீட்டு மனுக்களும் விசாரணைக்கு ஏற்கப்படுகின்றன. இதனால் பதிவுத்துறை 2 மேல் முறையீட்டு மனுக்களுக்கும் வழக்கு எண் வழங்கி, ஜூலை 26ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.