கிரானைட் முறைகேடு விசாரணை இறுதிக் கட்டத்தில்.. மதுரை கலெக்டருக்கு சகாயம் சம்மன்
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சட்ட ஆணையர் சகாயம் சம்மன் அனுப்பியுள்ளார். வரும் 7ம் தேதி ஆஜராகி உரிய விளக்க அறிக்கை தரும்படியும் கேட்கப்பட்டுள்ளதால் கிரானைட் முறைகேடு விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த ரூ.16 ஆயிரம் கோடி அளவிலான கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளார். இதுவரை 15 கட்ட விசாரணைகள் முடிந்துள்ளன. வருகிற 23ம்தேதி வரை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சகாயம் மற்றும் அவரது குழுவினர் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
16வது கட்ட விசாரணை
இந்த நிலையில் ஜூலை 1ம் தேதி 16வது கட்ட விசாரணையைத் சகாயம் குழுவினர் தொடங்கினர். ரானைட் முறைகேடு தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக தொடரப்பட்ட வழக்குகளில் மேலூர், மதுரை நீதிமன்றங்களில் ஆஜரான அரசு வக்கீல்கள் வழக்கின் விவரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு சகாயம் சம்மன் அனுப்பி இருந்தார்.
அரசு வழக்கறிஞர்கள் அறிக்கை தாக்கல்
மேலூர் அரசு வழக்கறிஞர்கள் ஷீலா, ஞானகிரி, மதுரை உயர்நீதிமன்றக்கிளை அரசு வக்கீல் புகழேந்தி ஆகியோர் இன்று சகாயம் முன்பு ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர்.
சகாயம் விசாரணை
அரசு வழக்கறிஞர்களிடம் கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை எந்தெந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அதன் தற்போதைய நிலவரம் என்ன? குற்றப்பத்திரிகைகளில் எந்தெந்த கிரானைட் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன? என்பது குறித்து சகாயம் கேட்டறிந்தார். அவர்கள் அளித்த பதில்களை சகாயம் குழுவினர் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து கொண்டனர். மேலும் அரசு வழக்கறிஞர்கள் கிரானைட் முறைகேடு தொடர்பாக பல பக்கங்கள் அடங்கிய அறிக்கை களையும் தாக்கல் செய்தனர்.
டாமின் அதிகாரிகளுக்கு
தமிழக அரசின் டாமின் நிறுவன இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அவருக்கு பதிலாக டாமின் நிறுவன சென்னை அதிகாரிகள் வெங்கடேசன், கண்ணதாசன் உள்பட 3 பேர் மதுரையில் சகாயம் முன்பு நேற்று ஆஜராகினர். அப்போது, முறைகேடு நடந்த காலங்களில் மதுரை மாவட்டத்தில் டாமின் எத்தனை குவாரிகளை நடத்தியது, எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன, அவற்றின் மதிப்பீடு என்ன, முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு சகாயம் பதில் பெற்றுள்ளார். 3 மணிநேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது.
மாவட்ட ஆட்சியருக்கு சம்மன்
இந்த நிலையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 7ம் தேதி ஆஜராகும் படியும் அப்போது உரிய விளக்க அறிக்கை தரும்படியும் கேட்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் விளக்கம் கிடைக்கும் பட்சத்தில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.