கிரானைட் ஊழல் விசாரணை: அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ் ஆஜராக சகாயம் நோட்டீஸ்
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா, அவருக்கு உதவியாக இருந்த முன்னாள் எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் சகாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, விக்கிரமங்கலம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனு மதித்த அளவைவிட கூடுதலாகவும், சில இடங்களில் அனுமதியே இல்லாமலும் கிரானைட் கற்களை வெட்டியதாக 2011ம் ஆண்டில் புகார் எழுந்தது. அப்போதைய ஆட்சியர் உ.சகாயம் விசாரணை நடத்தி, முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்
சகாயம் மாறுதலான பின் மதுரை ஆட்சியராகப் பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா காவல், வருவாய், கனிமம், பொதுப்பணி உள்ளிட்ட அரசுத் துறைகளை ஒருங்கிணைந்து கிரானைட் குவாரிகளிலும் சோதனை மேற்கொண்டார். அப்போது ஜிபிஎஸ் கருவிகள், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆய்வு நடத்தி கிரானைட் முறைகேடுகளை துல்லியமாக கண்டறிந்தனர். இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பிரபல தொழிலதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட பலரை போலீஸார் கைது செய்தனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை மாவட்டத்தில் நடந்த ரூ.16 ஆயிரம் கோடி அளவிலான கிரானைட் முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார். இதுவரை 15 கட்ட விசாரணைகள் முடிந்துள்ளன. வருகிற 23ம்தேதி வரை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சகாயம் மற்றும் அவரது குழுவினர் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுமக்களின் மனுக்கள்
தொடக்கத்தில் குவாரிகள் அமைந்துள்ள மேலூர், கீழவளவு பகுதிகளில் சகாயம் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது குவாரிகளால் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்த புகார் மனுக்கள் போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து தற்போது சகாயம் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. புகார் அளித்தவர்களையும், அவற்றை விசாரித்த இன்ஸ்பெக்டரையும் நேருக்கு நேர் வைத்து சகாயம் குழுவை சேர்ந்த உதவி ஆட்சியர் பிரியதர்சினி நேற்று விசாரணை நடத்தினார்.
மாவட்ட எஸ்.பி. விளக்கம்
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணைக்கு ஆஜராகுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியத்திற்கு அவர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அவர் அனுப்பி கடிதத்தில், ‘விடுப்பில் உள்ளதால் கமிஷன் முன் ஆஜராக முடியவில்லை' என தெரிவித்திருந்தார். இதனிடையே, மதுரை மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்
இதனிடையே கடந்த 2012ல் மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக குவாரிகளுக்கு சீல் வைத்தல், வழக்குகளை பதிவு செய்தல், அபராதம் விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அப்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, அவருக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் சகாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இவர்கள் இன்று அல்லது நாளை ஆஜராகக் கூடும் என கூறப்படுகிறது.
ஜூலை 23 காலக்கெடு
இவர்களும் அரசிடம் ஆலோசனை கேட்டுத்தான் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சகாயம் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும் காலக்கெடு வருகிற 23ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் இரவு பகலாக அறிக்கை தயார் செய்யும் பணியில் சகாயம் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி விசாரணையை தொடங்கினார் சகாயம். இதுவரை 16 கட்டங்களாக விசாரணை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.