கிரானைட் கொள்ளை ஆய்வு: சகாயம் குழுவுக்கு ஆதரவு இயக்கம் தொடக்கம்
சென்னை: கனிம மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்படவுள்ள சகாயம் குழுவுக்கு ஆதரவாக சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து சகாயம் ஆய்வு குழு ஆதரவு இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில், கிரானைட் மற்றும் கனிமவளம் முறைகேடுகளை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளது. தனக்கு உதவியாளர்களை நியமிக்கும்படி, அரசுக்கு, சகாயம் கடிதம் அனுப்பினார். அரசு கண்டுகொள்ளவில்லை.
நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய், அபராதம் விதித்ததுடன், சகாயத்திற்கு தேவையான உதவிகளை வழங்கும்படி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், சகாயம் விசாரணைக்கு, அரசு தேவையான
உதவிகளை வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள, சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து, சகாயத்திற்கு உதவ முடிவு செய்துள்ளனர். இதற்காக, சகாயம் ஆதரவு அமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த ஆய்வுக் குழு கிராமங்களை தோறும் சென்று தங்கள் குழு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.
மேலும், கனிம மணல் கொள்ளை தொடர்பான ஆதாரங்களை திரட்டித் தரும் பணியை மேற்கொள்ளவுள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கனிம வள கொள்ளையில் 30 லட்சம் கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த அமைப்பு குறித்து, பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முகிலன், சகாயம் ஆய்வுக் குழுவிற்கு, தேவையான விவரங்களை பெற்றுத்தர, தமிழக முழுவதும் உள்ள, சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து பேசி, ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், லஞ்ச ஒழிப்பு செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், விவசாய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், ஆர்வமுள்ள தனிநபர், ஆகியோரைக் கொண்டு, ஒருங்கிணைப்பு குழு அமைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.