கிரானைட் குவாரி ஆய்வின் போது விபத்தில் சிக்கிய ஆளில்லா விமானம் 3 நாட்களுக்குப் பின் மீட்பு
மதுரை: மதுரை அருகே கிரானைட் குவாரி ஆய்வின் போது விபத்தில் சிக்கிய ஆளில்லா விமானம் மூன்று நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் இன்று மீட்கப்பட்டுள்ளது. கேமராவில் பதிவான காட்சிகள் சேதமின்றி உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 4கட்ட ஆய்வு மேற்கொண்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவினர் கடந்த திங்கட்கிழமையன்று வரிச்சியூர் கருப்புக்கால் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் குவாரி பள்ளங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த விமானம் குவாரியின் மையப் பகுதியில் இருந்து ஓரப் பகுதிக்கு பறந்தபோது கிரானைட் பாறையில் மோதி குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் விழுந்து மூழ்கியது. இதனால், ஆய்வுப்பணி தடைபட்டது.
இதுகுறித்து, மதுரை தல்லாகுளம் தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தை சேதாரமின்றி மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களாக தீவிரமாக தேடி வந்த நிலையில் ஆளில்லா விமானம் இன்று மீட்கப்பட்டது. இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவான படங்கள் சேதமின்றி உள்ளனவா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நவீன கேமராக்கள்
ரூ. 1.65 லட்சம் மதிப்புள்ள இந்த ஆளில்லா விமானம் 4 கிலோ எடையுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமிராக்கள் குவாரி பள்ளங்களைப் பதிவு செய்யும். நவீன கருவிகள் மூலம் படங்கள் ஆய்வு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
சட்ட விரோத குவாரிகள்
கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக ஏற்கெனவே ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. பல சட்டவிரோத குவாரிகளை இரவோடு இரவாக மூடி விட்டனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட குவாரி பள்ளங்களில் 200 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், இந்த குவாரிகளில் எவ்வளவு கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என கணக்கிட முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே, இதுபோன்ற குவாரிகளையும், அரசு புறம்போக்கு, கண்மாய், கால்வாய் பகுதிகளிலும் தனியார் பட்டா நிலங்களிலும் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கிரானைட் பாறைகளை கணக்கிடவும் மீண்டும் இந்த ஆளில்லா விமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.