இயக்குநர் கவுதமன் தலைமையில் கிண்டியில் பூட்டுப் போராட்டம் - ஸ்தம்பித்த போக்குவரத்து: வீடியோ
சென்னை கிண்டி மேம்பாலத்தை பூட்டு பூட்டி இயக்குநர் வ.கவுதமன் மற்றும் இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
சென்னை: கிண்டி மேம்பாலத்தில் இரும்பு சங்கிலியைப் பிணைத்து பூட்டுப் போட்டு விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து இழுத்துச் சென்றனர்.
இயக்குநர் வ.கவுதமன் மற்றும் இளைஞர்கள் ஹைட் ரோ கார்பன் திட்டம், நியுட்ரினோ திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினர்.
அதற்காக கிண்டி மேம்பாலத்தில் பெரிய இரும்புச் சங்கிலியை பிணைத்து பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர். கிண்டியில் அமைந்துள்ள கத்திப்பாரா மேம்பாலம் விமானநிலையம், கோயம்பேடு, பூந்தமல்லி, மவுண்ட்ரோடு ஆகிய முக்கிய சாலைகளை இணைக்கும் இடம்.
ஆகையால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் போவதற்கு வழியின்றி முடங்கின. இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
போலீசார் உடனே வந்து சாலையில் பிணைக்கபப்டிருந்த பூட்டு சங்கிலியை சுத்தியலால் உடைத்து அந்த சங்கிலிகளை அகற்றினர். மேலும் போராட்டக்காரர்களை கைது செய்து தரதரவென இழுத்து வேனில் ஏற்றினர். அப்போதும் இளைஞர்கள் கோஷங்களை எழுப்பியபடியே சென்றனர்.