திருவண்ணாமலை கிரிவலப் பாதையை தாராளமாக விரிவுபடுத்தலாம்.. ஆனால்!
திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை பசுமைத் தீர்ப்பாயம் நிபந்தனையுடன் விலக்கியது.
சென்னை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் விரிவாக்கம் செய்து கொள்ளுங்கள். ஆனால் பாதையில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது என்று பசுமைத் தீர்ப்பாயம் நிபந்தனை விதித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அக்னி வடிவில் உள்ள சிவபெருமாணை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
மேலும் பௌர்ணமி நாள்களிலும் பக்தர்கள் கிரிவலப் பாதையில் வலம் வந்து கோயிலுக்கு சென்றடைவர். கிரிவல பாதையில் ஏராளமான கோயில்களும், தீர்த்தங்களும் உள்ளன. இந்நிலையில் கிரிவலப்பாதையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பாதையை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின.
இந்த பணிகளின்போது அதிக அளவிலான மரங்கள் வெட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இதை விசாரணை நடத்தியது. பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விரிவாக்கப் பணிகளுக்கு தடையும் விதித்தது.
பின்னர் சில நிபந்தனைகளுடன் தடை விலக்கப்பட்டது. அதன் பின்னர், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இவ்வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிரிவலப்பாதை விரிவாக்கத்திற்காக 65-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக தெரிவித்திருந்தது.
வழக்கு விசாரணை கடந்த மார்ச் 28-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 15 நாட்களுக்குள் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைப் பசுமைத் தீர்ப்பாயம் இன்று நீக்கிவிட்டது. எந்த மரத்தையும் வெட்டாமல், விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அதுமட்டுமன்றி, தீர்த்தங்கள், பாதங்கள் உள்ளிட்ட வழிபாட்டு இடங்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.