10 பேர் உயிரைக் குடித்த ராணிப்பேட்டை கழிவுநீர் தொட்டி விபத்து: கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவு
வேலூர்: ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு, கூடுதல் இழப்பீடு வழங்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் 100க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 86 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குழாய்கள் மூலம் சிட்கோ கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பின், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. இத்தொட்டி, மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியோடு, தனியார் தோல் தொழிற்சாலைகளால் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இங்கு புதிதாக கழிவுநீர் சேமிப்பு தொட்டி ஒன்று கட்டப் பட்டது. இதில், அளவுக்கதிகமாக கழிவுநீர் சேமிக்கப்பட்டதால் திடீரென கடந்தவாரம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில், கழிவுநீர்த் தொட்டியின் அருகே தங்கியிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
விபத்தில் பலியான, 10 பேரின் குடும்பத்திற்கு, தலா, 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க, முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இது தவிர தோல் தொழில் அதிபர்கள் சங்கம் சார்பில், தலா, 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்திவருகிறது. அதன்படி, இந்த வழக்கில், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 2.5 லட்சம் ரூபாய் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அந்த தொட்டியில் கழிவுகளை தேக்கிவைத்த தொழிற்சாலைகளுக்கு, ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத்தை 87 தோல் தொழிற்சாலைகள், தமிழக வளம் மற்றும் சுற்றுச்சூழல்துறையிடம் வழங்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.