ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.. சாய கழிவுநீர் பாட்டிலுடன் நுழைந்த பொதுமக்கள்
மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு சாய கழிவுநீர் கலந்த பாட்டிலுடன் பொதுமக்கள் வந்தனர்.
ஈரோடு: சாய கழிவு நீர் கலந்த தண்ணீர் பாட்டிலுடன் புகாரளிக்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2300-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சிப்காட் தொழிற்பேட்டை வளாகம். இந்த தொழில்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள். கண்ணாடி தொழிற்சாலை டயர்களை உருக்கி ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் என 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை நிலத்தடியில் தொழிற்சாலைகள் திறந்துவிடுவதால் சிப்காட்டை சுற்றியுள்ள எழுதிங்கள்பட்டு , செங்குளம், காசிப்பில்லாம்பாளையம், ஓடைக்காட்டூர்குள்ளம்பாளையம், ஈங்கூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் முற்றிலுமாக மாசு அடைந்து மனிதர்களும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் , சாய கழிவு நீர் கலந்த தண்ணீர் பாட்டிலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆட்சியரிடம் தாங்கள் கொண்டு வந்த புகார் மனுவினை அளித்தனர்.
சிப்காட் பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலையின் கழிவுநீர் தொடர்ந்து நிலத்தடியில் கலந்து வருவதாகவும், இரவு நேரங்களில் சிப்காட்டியில் இயங்கிவரும் டயர்களை உருக்கி ஆயில் எடுக்கும் தொழிற்சாலையின் புகையினால் மூச்சுதிணறல் ஏற்படுவதாகவும் கடந்த சில மாதங்களில் மட்டும் 15- மேற்பட்டோர் தொழிற்சாலையின் கழிவுகளினால் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், இதற்கு மாவட்டநிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.