திருமணத்துக்கு முன் தின இரவு மணமகன் மின்சாரம் தாக்கி பலி
தஞ்சாவூர் அருகே திருமணத்துக்கு முன்தின இரவு மின்சாரம் தாக்கி பலியான சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருமணம் நடக்கவிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (24). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
மாரிமுத்துவின் பெற்றோர் அவர்களுடைய உறவினர் பெண்ணை திருமணத்துக்கு நிச்சயம் செய்திருந்தனர். அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், திருமண விழாவுக்காக தெக்கூரில் உள்ள அவரது வீட்டில் அமைக்கப்பட்ட பந்தலில் போடப்பட்ட டியூப் லைட் எரியாததால் அதை மணமகன் மாரிமுத்து சரிசெய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மணமகன் மாரிமுத்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மின்சாரம் தாக்கி மணமகன் உயிரிழந்த சம்பவம் தெக்கூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.