பெருந்துறை சிப்காட்: பூமியில் புதைக்கப்பட்ட திடக்கழிவுகள்.. 10 கிமீ சுற்றளவு நிலத்தடி நீர் பாதிப்பு
பெருந்துறை ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு: பெருந்துறையில் இயங்கி வரும் சிப்காட் ஆலையினால், பல ஆயிரம் டன் ரசாயன கழிவுகள் மண்ணில் புதைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன், ஆலையின் கழிவுகளால் 10 கிமீ சுற்றளவிற்கு நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2700 ஏக்கர் பரப்பில் ஆசிய அளவில் மிகப்பெரிய தொழிற்பேட்டையான சிப்காட் அமைந்துள்ளது. இதில் 250 க்கும் அதிகமான ஆலைகள் இயங்கி வருகின்றன.
மறுசவ்வூடுமுறை
இதில் சாய, தோல் ஆலைகளும் அடக்கம். உயர்நீதி மன்ற உத்தரவின் படி ஒரு சொட்டு தண்ணீரை கூட இவர்கள் வெளியேற்ற கூடாது. மறு சவ்வூடு முறையில் சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என்பது விதி். ஆனால் இங்குள்ள ஆலைகள் விதிகளை காற்றில் பறக்கவிட்டு கழிவுகளை நேரடியாக வெளியேற்றுகின்றன என்பது புகார்.
நிலத்தடி நீர் பாதிப்பு
ஆலைகளில் தேங்கிய பல ஆயிரம் டன் ரசாயன நச்சு திட கழிவுகள் குளம், கிணறு மற்றும் ஆங்காங்கே மண்ணில் புதைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுற்று வட்டாரங்களில் 10 கிமீ சுற்றளவில் உள்ள வெட்டுக்காட்டு வலசு, எழுதிங்கள்பட்டி, குட்டப்பாளையம், செங்குளம், கூத்தம்பாளையம், ஓடைக்காட்டூர், பெரிய வேட்டுவபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், இவற்றை பயன்படுத்த முடியாமல் குடிநீருக்கும், கால் நடைகளுக்கும் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். நிலம், நீர், காற்றும் மாசடைந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கிராமங்களை காலி செய்யும் நிலையும், பல நோய் தாக்குதல்களுக்கு ஆளாகி இருப்பதாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க 26 ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். சிப்காட் வளாகத்தில் தேங்கி கிடக்கும் திட கழிவுகளை அகற்றி, நீராதாரத்தை பாதுகாக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர்.