நிலத்தடி நீர் குறைவால் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் போகலாம் – திடுக்கிடும் தகவல்
சென்னை : அதிகரித்து வரும் வெப்பநிலையால் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது.இந்த நிலைமை நீடித்தால் உணவுப்பஞ்சம் போல குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சென்னையில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் தென்கிழக்கு கடலோர பகுதி அலுவலகம் மழை பொழிவு, நிலத்தடி நீர் இருப்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.
ஆய்வில் கிணறுகள்:
இந்நிறுவனம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து 1369 கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டது. இதில் 778 கிணறுகளும் 591 ஆழ்துளை கிணறுகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
நீர்மட்டக் குறைவு சதவீதம் அதிகம்:
தமிழகத்தில் 712 கிணறுகளில் மேற்கொண்ட ஆய்வில் 78 சதவீதம் அதாவது 559 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே சமயம் 153 கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
சென்னையிலும் குறைவு:
தலைநகர் சென்னையில் உள்ள 13 கிணறுகளில், ஏழு கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், ஆறு கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளது. இவற்றில் ஐந்து கிணறுகளில் 2 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஒரு கிணற்றில் 4 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மழைப்பொழிவு குறைவு:
நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி தவிர்த்து இதர மாவட்டங்களில் மழைபொழிவு குறைந்துள்ளது.மாநிலத்தின் கடலோரம் மற்றும் மத்திய பகுதியில் 76 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் 10 மீட்டருக்குள் உள்ளது.
மழைநீர் திட்டம் தொய்வு:
கடந்த 2001 இல் மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் அதன்பின் அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.
நிலத்தடி நீர்வளம் குறைவு:
இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில் நிலத்தடி நீர் வளத்தை காப்பது இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.