15 மாவட்டங்களில் "ஆவியாகி"ப் போன நிலத்தடி நீர் மட்டம்.. ஒரு பகீர் ரிப்போர்ட்!
சென்னை: தமிழகத்தில் நெல்லை, மதுரை, கோவை உட்பட 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையால் அணைகள், ஏரிகள், குளங்களின் நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால், பல இடங்களில் தூர்வாரி, ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப் படாததால் பருவமழையால் கிடைத்த நீரை முழுமையாக சேமிக்க இயலாமல் போனது.
இதனால் கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாவிட்டாலும், அணைகளின் நீர் இருப்பு வேகமாகக் குறைந்தது. இதனால் 120 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் 50 டிஎம்சி மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் இன்னும் 2 மாதங்களுக்கு மட்டும் போதுமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நிலத்தடி நீரை நம்பி
இதனால், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டுள்ளது. எனவே, நிலத்தடி நீரை நம்பி பல இடங்களில் விவசாயம் நடந்து வருகிறது. ஆனால், தற்போது அதிர்ச்சி தரும் வகையில், தமிழகத்தில் பல முக்கிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆய்வு
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டுவருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது.
16 மாவட்டங்களில் அதிகரிப்பு
அதன்படி, கடந்தமாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் கடந்த ஆண்டு 2015 ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
15 மாவட்டங்களில் குறைவு
அதேசமயம் வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நெல்லை ஆகிய 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.