தமிழகத்தில் ஏமாற்றிய பருவமழை: குறைந்து போன நிலத்தடி நீர்மட்டம்
சென்னை: வடகிழக்குப் பருவமழை சரியான நேரத்தில் பெய்யாமல் ஏமாற்றிவிட்டதை அடுத்து தமிழகத்தில் 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் பருவமழை அதிகம் பெய்யும். ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.
வங்கக்கடலில் உருவான 2 புயல்கள் திசைமாறி சென்றன. ஈரப்பதம் குறைந்து போனதால் தமிழ்நாட்டில் மழைக்க பதிலாக குளிரே நிலவியது. நவம்பர் மாதம் மழையை எதிர்பார்த்து ஏமாந்த போனதுதான் மிச்சம்.
வடகிழக்குப் பருவமழை
டிசம்பர் முழுவதும் வடகிழக்கு பருவ மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்றாலும் அதிக மழைக்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை.
மாதி புயல்
காற்றின் திசை மாறியதால் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது மாதி புயல். இதனால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கனமழையின்றி சிறு தூரலோடு நின்று போய்விடுகிறது.
டெல்டா மாவட்டங்களில்
இந்த ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரளவிற்கு மழை பெய்து விவசாயிகளின் மனதை குளிர்வித்துள்ளது. மேட்டூர் அணையின் நீரும் ஓரளவிற்கு கிடைத்து வருகிறது.
நிலத்தடி நீர்மட்டம்
எனினும் வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது என மாநில நிலத்தடி நீர் ஆதார மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டம்
சென்னையில் கடந்த ஆண்டு 3.57 மீட்டர் ஆழத்தில் கிடைத்த தண்ணீர் இப்போது 1.30 மீட்டர் குறைந்து 4.87 ஆழத்துக்கு போய்விட்டது.
காஞ்சிபுரம்
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் திருவள்ளூரில் 2.96 மீட்டரில் இருந்து 3.33 மீட்டர் ஆகவும், காஞ்சீபுரத்தில் 2.64 மீட்டரில் இருந்து 3.64 மீட்டர் ஆகவும் நீர் கிடைக்கும் ஆழம் அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம்
கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த ஆண்டு 8.5 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் 14 மீட்டருக்கும் கீழே சென்று விட்டது. அதாவது 5.55 மீட்டர் கீழே இறங்கி உள்ளது.
தேனி மாவட்டம்
தேனியில் 11 மீட்டர் ஆழத்தில் கிடைத்த தண்ணீர் இப்போது 14.5 மீட்டர் ஆழத்துக்கு இறங்கி விட்டது.
அபாய எச்சரிக்கை
இது போல் வேலூர், கடலூர், தஞ்சை, திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
ஈரோட்டில் உயர்வு
கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.