குரூப் 2 தேர்வு முடிவுகள்- 15 நாட்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: குரூப் 2 தேர்விற்கான முடிவுகளானது இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இதுகுறித்து இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், "கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "குரூப் 2" தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும். இதேபோன்று வி.ஏ.ஒ தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியாகும். குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து இன்னும் 1 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும்.
உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு 162 இடம் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அக்டோபர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 21 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும், விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஏதாவது தகவல் தெரிந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரலாம்" என்று தெரிவித்துள்ளார்.