786 குரூப் 2ஏ பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு - சென்னையில் துவங்கியது
சென்னை: தமிழகத்தில் குரூப் 2ஏ தேர்வில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில் 786 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு சென்னை பிரேசர் பாலச்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலந்தாய்வு வருகிற 13 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "குரூப் 2 ஏ பதவிகளை உள்ளடக்கிய உதவியாளர்கள் பணியிடத்திற்கு 734 பேரும், தனி எழுத்தர் பணியிடத்திற்கு 52 பேரும் என மொத்தம் 786 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக 2 ஆம் கட்டமாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. வருகிற 13 ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் 13 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளுக்கும் தலா 200 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.