காலியாக உள்ள 4931 குரூப்-4 பணியிடங்கள் இந்த வருடம் நிரப்பப்படும்- டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி
சென்னை: டி.என்.பி.எஸ்.சி மூலமாக 2016 ஆம் ஆண்டில் குரூப் -4 பணியிடங்களில் காலியாக உள்ள 4931 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதன் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருடத்தில் 10,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில் குரூப்-4 பணிகளில் (இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர்) மட்டும் 4,931 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், குரூப் 1 பணியிடங்களில் துணை ஆட்சியர், உதவி வணிக அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அலுவலர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 45 காலியிடங்கள், 65 உதவி ஜெயிலர் பணியிடங்கள், 172 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளும் அறிவிப்பில் இருக்கின்றன.
கடந்த ஆண்டு வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்று நடத்த முடியாமல் போன தேர்வுகளும் இந்த ஆண்டு அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளன. வருடாந்திர தேர்வு காலஅட்டவணை டி.என்;பி.எஸ்.சி இணையதளமான www.tnpsc.gov.in என்பதிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறையில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.