ஓபியம் வளர்க்க அரசே அனுமதி வழங்குமா...? போதைப் பொருள் தடுப்பு அதிகாரி வெங்கடேஷ் பாபு - Exclusive
ஓபியம் செடி வளர்ப்பது குறித்தும் அதனை யார், எப்படி வளர்க்கலாம் என்பது குறித்தும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தென்னிந்திய தலைவர் வெங்கடேஷ் பாபு ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில்
சென்னை: ஓபியம் மருத்துவப் பயன்பாட்டுக்கு அரசின் ஒப்புதலோடு லைசன்ஸ் வாங்கி வளர்க்க வேண்டும். லைசன்ஸ் இல்லாமல் வளர்த்தால் சட்டப்படி குற்றமாகும் என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தென்னிந்திய தலைவர் வெங்கடேஷ் பாபு ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.
இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் அருணாச்சல பிரதேசத்தில் பல ஏக்கரில் ஓபியம் பயிரிடப்பட்டிருப்பது தெரிந்தது. அதனை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தென்னிந்திய தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமையில் அழித்தனர்.
சட்ட ரீதியில் ஓபியம் வளர்ப்பது, மருத்துவப் பயன்பாடு என பல விஷயங்கள் குறித்து வெங்கடேஷ் பாபு ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசு ஓபியம் போதை மருந்து செடிகளை வளர்க்கலாம் என விவசாயிகளுக்கு லைசன்ஸ் கொடுத்து, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வளர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வளர்த்துக்கொள்ள சட்டரீதியாக அனுமதி தந்துள்ளது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவுத்துறை அதிகாரிகள் இதனை அவ்வப்போது மேற்பார்வையிடுவார்கள்.
போதைப் பொருள் அல்ல...மருந்து!
இது மருத்துவ பயன்பாட்டுக்காக மட்டுமே பயிரிடப்படுகிறது. இந்த ஒபியத்திலிருந்து மார்பின், திபேன், கொடின், பெப்பாவரின், நார்கோடின் உள்ளிட்ட அல்கலாய்டுகள் இதில் உள்ளன. இதில் இருக்கும் மார்பின் ஒரு வலி நிவாரணி. ஒபியம் பயிரிட்டு, நமது தேவைக்குப் போக மீதியுள்ளவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.
மருந்து கம்பெனிகளுக்கான தயாரிப்பு
மேலும், அரசின் தொழிற்சாலைகளில் அல்கலாய்டுகளாக மாற்றப்படுகிறது. பிறகு அதனை மருந்து கம்பெனிகளுக்கு மருந்து தயாரிக்கக் கொடுக்கிறோம். நார்கோட்டிக்ஸ் கமிஷனர் ஒவ்வொரு கம்பெனிக்கும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என தீர்மானித்து, மருந்து கம்பெனிகளுக்கு அனுப்புகிறார். பிறகு அவர்கள் மருந்து தயாரிக்கிறார்கள்.
சட்டப்படி குற்றம்
அரசு அனுமதித்த அந்த மூன்று மாநிலங்களைத் தவிர வேறு எங்கு தயாரித்தாலும் அது சட்டப்படி குற்றமாகும். அப்படி அத்துமீறி பயிரிடப்படும் பகுதிகளில் அதனை அழிக்கும் பொறுப்பு எங்களுடையது.
போதைப் பொருளைத் தடுப்போம்
அதன் ஒரு பகுதியாக அருணாச்சல பிரதேசத்தில் பயிரடப்பட்டிருந்த பயிர்களை அழித்தோம். ஓபியம், ஹெராயினாக மாற்றப்பட்டு உலகம் முழுவதும் போதை பொருளாகக் கொடுக்கப்பட்டு அதற்கு யாரும் அடிமையாகிவிடக் கூடாது என்கிற கடமை உணர்ச்சியிலும் இதனை அழித்தோம். இதற்காக அரசு எங்களை விருது கொடுத்து கௌரவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் அரசோடு இணைந்து செயலாற்றினால் போதைப் பொருளைத் தடுக்க முடியும். - இவ்வாறு வெங்கடேஷ் பாபு கூறினார்.