இலவசங்களை காவு வாங்கும் ஜிஎஸ்டி... பெரிய நிறுவனங்கள் விளம்பர யுக்திக்கு ஆப்பு
பெரிய வணிக நிறுவனங்கள் ஒரு பொருள் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று வாடிக்கையாளர்களை கவரும் யுக்தி இனி எடுபடாது என்று கூறப்படுகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் முதலில் இதுபோன்ற இலவசங்கள் பாதிக்கப்படும்
சென்னை: ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், பழைய பொருட்களுக்கு சலுகை விலையில் புதிய பொருள் என்ற ஈர்ப்பான இலவச விளம்பர வாசகங்கள் இந்திய சந்தையில் பிரபலமானவை. இது ஜிஎஸ்டியால் காணாமல் போகும் என்கிறார்கள்.
பெரிய நிறுவனங்களின் இது போன்ற வணிக யுக்திகளுக்கு ஜிஎஸ்டி வரி தடை போடும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதனால் பெரிய அளவில் வணிக சரிவுகள் இருக்கும் என்று தொழிலதிபர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதனால், இந்தக் கருத்துகள் உண்மையா? பெருநிறுவனங்கள் வணிக யுக்திகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வருமா என்பது குறித்து விவாதங்கள் எல்லா பக்கத்திலும் எழுந்துள்ளன.
இலவசங்களுக்கு ஆப்பு
ஒரு பொருளை வாங்கினால் இன்னொரு பொருளை இலவசமாக தருவது நம்மூர் நிறுவனங்களின் காலகால வியாபார யுக்திகளில் ஒன்றாகும். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்ததும் இதுபோன்ற சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வெற்றிகரமாக உள்ள ஜிஎஸ்டி
157 நாடுகளில் ஜிஎஸ்டி வெற்றிகரமாக அமலில் உள்ள நிலையில், வணிக சரிவுகள் ஏற்படும் நிலை வர வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனாலும் ஜிஎஸ்டி வரியை கணக்கிடும் நடைமுறையால் பெருநிறுவனங்களின் வணிக யுக்திகளில் மாற்றம் வரும் என்பது அவர்களின் கருத்தாகவுள்ளது.
பழசுக்கு புதுசு
கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனையிலும், டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் சந்தையிலும், பழைய பொருட்களை கொடுத்து விட்டு புதிய பொருள்களை வாங்குவது மக்களின் வாடிக்கை. இந்த நடைமுறையில் மாற்றம் வரும் என்கிறார்கள்.
சில்லறை வணிகர்கள் பாதிப்பார்கள்
தற்போதைய நடைமுறையில் பழைய பொருளின் மதிப்பை கழித்து விட்டு, நாம் பணமாக செலுத்தும் தொகைக்கு மட்டுமே வரி கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனால் ஜிஎஸ்டியிலோ புதிய பொருளின் மொத்த மதிப்பிற்கே வரி கணக்கிடப்படும் என்பதால் சில்லரை விற்பனையாளர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
பெரும்பாலான பொருட்களுக்கு 18% வரி
தற்போது சுமார் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் எப்.எம்.சி.ஜி எனப்படும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில், பெரும்பாலானவை 18 சதவீத வரி விதிப்பிற்குள் வருகிறது. அத்துடன் போக்குவரத்து செலவும் குறையும் என்பதால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விலை கூடும்
அதே நேரம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் பெரும்பாலானவை 28 சதவீத வரி விதிப்பிற்குள் வருவதால் அவற்றின் விலை அதிகரிக்கும். ஜிஎஸ்டி வரியால் பெருநிறுவனங்களின் அடிப்படை வணிக யுக்திகள் அடியோடு மாறுமா அல்லது மாறாமல் அதே நிலை தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.