லீவு கொடுக்காத ஏசி... கடும் மன உளைச்சலில் கிறுக்கி வைத்த கீழ்பாக்கம் எஸ் ஐ
மன உளைச்சல் காரணமாக குறிப்பேட்டில் எழுதிய சார்பு ஆய்வாளருக்கு மாநகர ஆணையர் அறிவுரை வழங்கினார்.
சென்னை: என்னங்கடா இது... ரகத்திலே இது புது ரகம்மால்ல இருக்கு. மன உளைச்சல் ஏற்பட்டால் உடல், மன நலம் பாதிப்பு ஏற்படும். இல்லையென்றால் தற்கொலை முயற்சியோ தற்கொலையோ செய்து கொள்வார்கள்.
ஆனால், கீழ்ப்பாக்கம் எஸ்.ஐ. துரைப்பாண்டியன் மன உளைச்சலுக்கு என்ன செய்திருக்கார் தெரியுமா? அன்றாட பணிகள் குறித்து குறிப்பு எழுதும் பொதுக்குறிப்பேடு நோட்டு ஒன்றினை எடுத்தார். அதில் இவ்வாறு எழுதுகிறார்.
'எஸ்.ஐ. துரைப்பாண்டியன் ஆகிய எனக்கு நீரிழிவு நோய் இருப்பதால், அதன் அளவு 418 ஆக இருப்பதால், எனக்கு அவ்வப்போது மயக்கம் வந்துவிடுகிறது. இதற்காக, கனம் கீழ்ப்பாக்கம் ஏசி (ஹரிகுமார்) அவர்களிடம் மருத்துவ விடுப்பில் செல்ல வேண்டும் என்று கேட்டபோது, 'நீங்கள் மருத்துவ விடுப்பில் சென்றால் உங்களுக்கு சார்ஜ் கொடுப்பேன்' என்றார்.
அதற்காக நான் சிறுவிடுப்பு கேட்டேன். அதுவும் தரவில்லை. கடந்த 3 மாதங்களாக, நான் தொடர்ந்து, ஒருநாள் விட்டு ஒருநாள் இரவுப் பணி செய்வதால், எனக்கோ, என் வாகனத்திற்கோ, ஏதாவது நடந்தால் கீழ்ப்பாக்கம் ஏசி அவர்கள்தான் காரணம்' என்று எழுதிவிட்டாராம்.
விஷயம் இதோடு நின்றுவிடவில்லை. இது சென்னை ஆணையரின் பார்வைக்கும் போய்விட்டதாம். அதனை கண்ட கமிஷனர், எஸ்.ஐ.-யிடம் "மேலதிகாரிகளின் தணிக்கைக்கு செல்லும் பொதுக்குறிப்பேட்டு நோட்டில் இப்படியா கிறுக்கி வைப்பது, ஒரு சார்பு ஆய்வாளர் செய்யக்கூடிய வேலையா இது?" என்று மனம் நொந்து கேட்டாராம்.
பின்னர் பிரச்சினையை புகாராக எழுதி கொடுக்காமல், பொதுநோட்டில் எழுதியதற்காக துரைபாண்டியன்மீது ஒழுங்கீன நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அறிவுரை கூறியதுடன் மனிதாபிமானத்துடன் அவருக்கு விடுமுறை அளிக்கும்படி செய்தாராம் ஆணையர்.
இந்த செய்தியிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாக புரிவது என்னவென்றால், காவலர்கள் இன்னமும் மனஅழுத்தத்தின் பிடியிலேதான் சிக்கி தவித்து வருகிறார்கள் என்பது. கடந்த மாதம் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க தமிழக முதல்வரின் உத்தரவுபடி யோகா பயிற்சி நடத்தப்பட்டது.
நல்ல விஷயம்தான். ஆனால் யோகா பயிற்சி மட்டுமே காவலர்களின் மன அழுத்தத்தை போக்கிவிடாது. புற சூழ்நிலை இனிமையாக அமைய வேண்டும். மனம் சார்ந்த பல்வேறு உடற்பயிற்சிகளை கூடுதலாக காவல்துறை பயிற்களுடன் தமிழக அரசு இணைக்க வேண்டும்.அத்துடன் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக விளையாட்டுகள், கவுன்சிலிங், பொழுது போக்குகள் போன்ற சில ஏற்பாடுகளையும் அரசு கொடுக்க வேண்டும்.
முக்கியமாக, காவலர்களின் உரிமைகள் கேட்கும் அமைப்பு ஒன்றினை தமிழக அரசு உருவாக்கி தர வேண்டும். அப்போதுதான் தங்களுடைய பிரச்சினைகளை நேரிடையாகவும், உடனடியாகவும் தெரிவிக்க முடியும். இல்லையென்றால், கீழ்ப்பாக்கம் எஸ்.ஐ. செய்த காரியம் போன்ற நிலைதான் அனைவருக்கும் ஏற்படும்.