அப்பாவின் அட்வைஸ்.. வீட்டை விட்டு ஓட்டம்.. பானிபூரி விற்று தவித்து வீடு திரும்பிய மாணவன்!
அறிவுரை கூறியதால் வீட்டைவிட்டு வெளியேறிய மாணவனை போலீசார் சென்னையில் மீட்டனர்.
Recommended Video
சென்னை: பெற்றோர் அறிவுரை கூறியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் ஒருவன் 5 மாதம் இன்னலுக்கு பிறகு மனம் திரும்பி மீண்டும் குடும்பத்துடனே இணைந்துள்ளான்.
குடியாத்தம் கள்ளூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட தொழிலாளியான இவரது மகன் லோகேஷ்வரன் வயது 15. கூலி வேலை செய்தாலும் தனது மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பெரும் சிரமத்திலும் படிக்க வைத்தார். 10-ம் வகுப்பு படிக்கும் லோகேஷ்வரன் சரியாக படிப்பதில்லை என்றும், எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் படிப்பே ஏறவில்லை என்றும், வெங்கடேசனிடம் பள்ளி ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து வெங்கடேசன் மகனை கண்டித்ததுடன், நான்தான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன், நீயாவது நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தந்தையின் அறிவுரையினால் வெறுப்படைந்த மாணவர் லோகேஷ்வரன் கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பெற்றோர் தவிப்பு
மகன் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததுடன், பல இடங்களில் தனது மகனை தேடி அலைந்தார், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து பார்த்தார். எந்தவித பிரயோஜனமும் கிடைக்கவில்லை. லோகேஷ்வரனை எங்குமே காணவில்லை.
மெரினாவில் பானிபூரி
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய லோகேஷ்வரன் சென்னை வந்துள்ளார். சென்னையில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். சாப்பாட்டிற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். பின்னர், மெரினா கடற்கரைக்கு சென்று அங்குள்ள பானிபூரி வியாபாரியிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது கொளுத்தும் வெயிலிலும் நின்று பானிபூரி விற்கும் நிலை லோகேஷுக்கு ஏற்பட்டது.
வெயிலின் கொடுமை
5 மாத அவதிக்கு பின்னர், கடும் மன உளைச்சல், வறுமை, பசி, வெயிலின் கொடுமை, தனித்துவிடப்பட்ட உணர்வு, உறவுகளின் அருமை... என ஒவ்வொன்றாக லோகேஷ்வரனுக்கு புரிய ஆரம்பித்தது. தந்தையின் அக்கறையும், படிப்பின் அவசியமும் தெரிய ஆரம்பித்தது. இறுதியில் மனம் நொந்து, வெறுப்பின் உச்சக்கட்டத்துக்கு வந்த லோகேஷ்வரன், நேற்று காலை மெரினா கடற்கரையில் உள்ள 1 ரூபாய் காயின் போனிலிருந்து வீட்டிற்கு போன் செய்தார்.
மகன் மீட்பு
போனை வெங்கடேசன் எடுத்ததும் பயம் காரணமாக உடனே கட் செய்துவிட்டார். ஆனால், வெங்கடேசன் அந்த எண்ணிற்கு உடனடியாக போன் செய்து, தனது மகன் அங்கிருப்பதையும், அவன்தான் தனக்கு போன் செய்தான் என்பதையும் அறிந்துகொண்டார். பின்னர் குடியாத்தம் டவுன் போலீசாருடன் மெரினாவுக்கு சென்று அங்கிருந்த லோகேஷ்வரனை இன்று காலை மீட்டதுடன், குடியாத்தம் அழைத்து சென்றனர்.
போலீஸார் அறிவுரை
காவல்நிலையத்திலேயே மகனின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த தாய், மகனை கண்டதும் கட்டிபிடித்து கதறி அழுதது அங்கிருந்தோரை கண்கலங்க செய்தது. பின்னர் போலீஸார் லோகேஷ்வரனுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
லோகேஷ்வரனே பாடம்...
பிள்ளைகளே... உலகிலேயே பெற்றோர்கள்தான் தங்கள் குழந்தைகள் மீது அதிகமான அன்பு வைப்பவர்கள். பெற்றோர்கள் தங்களுடைய அனுபவங்களை சுருக்கிதான், உங்களுக்கு அறிவுரையாக வழங்குகிறார்கள் என்பதை உணருங்கள். அவர்களது அறிவுரை உங்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தால் அதை வெளிப்படையாகவும், பணிவாகவும் சொன்னாலே பெற்றோர் புரிந்துகொள்வார்கள்.
பெற்றோரிடம் மனம் விட்டு பேசினாலே எதற்கும் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளை கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பதில்லை. பெற்றோர் கூறும் அறிவுரையை பெரிய துன்பமாக நினைத்து வழி தவறி வாழ்க்கையை தொலைத்து விடுவோருக்கு லோகேஷ்வரன் என்றும் ஒரு பாடமாக இருப்பான்.