கோவை குட்கா குடோனில் விடிய விடிய ரெய்டு.. பல கோடி ரூபாய் குட்கா பறிமுதல்
போலீசார் நடத்திய சோதனையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
Recommended Video
கோவை: கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா குடோனில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த குட்கா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஜெயின் என்பவருக்கு சொந்தமான தனியார் குடோன் இயங்கி வருவதாகவும், சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் 40 ஆயிரம் சதுரடியில் உள்ள இந்த தொழிற்சாலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,பான்மசாலா, பான்பராக், சாந்தி, விஐபி மற்றும் போதை தரும் குட்கா உற்பத்தி செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தன.
இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்றிரவு விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது தொழிற்சாலைக்குள் வெளிஆட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அப்போது, போதை பாக்குகள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன் மூலப்பொருட்கள் மற்றும் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 79 மூட்டைகள் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள், கண்ணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி முன்னிலையில் ஒருஅறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
இந்த சோதனை தொடர்பாக சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்தார், அப்போது, இந்த போதை பொருட்கள் தொடர்பாக ஏற்கனவே தொழிற்சாலை தரப்பில் லைசென்ஸ் பெற்றிருப்பதாகவும், இப்போது, தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் தயாரிப்பதாக வந்த தகவலை அடுத்தே சோதனை நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நா.கார்த்திக் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யகூடாது என இந்திய அரசு தடை செய்துள்ளது. அதையும் மீறி தமிழகத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் துணையோடு, லஞ்சம் பெற்றுகொண்டு விற்பனை செய்து வருகின்றனர்.
அதனால் பல ஆயரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்லி, திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குட்கா தொடர்பாக சட்டமன்றத்தில் பல முறை பிரச்சினைகளை கிளப்பினார், தொடர்ந்து குட்கா விவகாரத்தில் எதிர்த்து வந்துள்ளார்கள். 2 நாட்களுக்கு முன்பாக கூட சென்னை உயர்நீதிமன்றம் குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க உத்திரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கூட கோவையில் வடநாட்டை சேர்ந்த தொழில் அதிபர் பான்மசாலாவிற்கு அனுமதி பெற்று, தடைசெய்யப்பட்ட போதை பொருளை தயாரித்து வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்து நானும் பார்வையிட்டேன். தொடந்து சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மர்மமான முறையில் இந்த பங்களா இயங்கி வந்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட்டிருந்தும் கூட குட்கா விற்பனை அமோகமாக விற்பனை நடைபெற்று கொண்டிருப்பதை காட்டுகின்றது. இதற்கு தமிழக அரசு துணை போகின்றது. உடனடியாக இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் குட்கா விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.