வரலாற்றில் முதல் முறையாக...1330 அடி பதாகையில் திருக்குறள் அதிகாரங்கள்: சென்னையில் உலக சாதனை !
சென்னை: வரலாற்றில் முதல் முறையாக சென்னை கடற்கரையில் உலக சாதனைக்காக 1330 அடி நீளம் கொண்ட உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னை மெரீனா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே வெளியிடப்பட்டது.
சென்னை:தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் தமிழ் ஆன்றோர் அவையும் இணைந்து வெளியிடும் இந்த திருக்குறள் பதிப்பானது 133 அதிகாரங்கள் அடங்கிய 1330 அடி நீளமுள்ள நெகிழிப் பதாகையில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை இவ்வாறன சாதனை வரலாற்றில் நடந்ததில்லை. சென்ற ஆண்டு 400 அடி நீளமுள்ள திருக்குறள் பதிப்பை நாங்கள் வெளியிட்டோம். அதை முறியடிக்கும் விதத்தில் இந்த ஆண்டு 1330 அடி திருக்குறள் பதிப்பை வெளியிட்டு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.
இந்த சாதனையை கின்னஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த உலக சாதனையை உலகில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் காணிக்கையாக்குகிறோம்.
உலகின் மிகச் சிறந்த மெய்யியல், நீதி, சமூகவியல், அரசியல், இல்லறம், மற்றும் வாழ்வியல் நூலான திருக்குறளை உலகில் உள்ள அனைவரும் படித்து பயன்பெற வேண்டும். திருக்குறள் காட்டிய நெறிப்படி தனிமனிதர்கள் மட்டுமின்றி உலக அரசுகளும் பின்பற்றி நல்லதோர் உலகை படைக்க உறுதி பூணவேண்டும்.
உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒப்பற்ற திருக்குறள் அவர்கள் தாய் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதை நினைத்து பெருமைப்படுவதோடு தங்கள் குழந்தைகளுக்கு மறவாமல் திருக்குறள் நெறியை போதிக்க வேண்டும். இப்போது நாங்கள் நிகழ்த்தியுள்ள திருக்குறள் உலக சாதனையின் மூலமாக இந்திய அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம். இந்த கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்குமாறு உலகத் தமிழர்கள் சார்பில் வேண்டுகிறோம்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல் வேண்டும். திருக்குறளை எல்லா பள்ளிகளிலும் பயிற்றுவித்தல் வேண்டும். திருவள்ளுவருக்கு தமிழில் அஞ்சல்தலை நாணயம் வெளியிட வேண்டும். திருவள்ளுவருக்கு பாராளுமன்றத்தில் சிலை அமைக்க வேண்டும். தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குதல் வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளாத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.