தூத்துக்குடியில் தரை தட்டிய குஜராத் தோணியால் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தரை தட்டி நின்ற குஜராத் தோணியை மீட்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் இருந்து பழைய இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு கடலூருக்கு ஒரு தோணி வந்தது. சரக்கை இறக்கி விட்டு அங்கிருந்து குஜராத்திற்கு தோணி புறப்பட்டது.
இதில் குஜராத்தை சேர்ந்த சங்கா போட்னிகா, ஜாவீதுகான், பிலால் மல்லா, நரேந்திரபாட்டியா உள்பட 8 பேர் மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த 3 பேர் உள்பட மொத்தம் 11 பேர் இருந்தனர்.
மன்னார் வளைகுடா பகுதியில் வநத போது தோணியின் எஞ்ஜின் பழதானது. இதையடுத்து அந்த வழியாக வந்த படகின் உதவியுடன் தோணியை கயிறு கட்டி பழுது பார்ப்பதற்காக தூத்துக்குடி பழைய துறைமுகம் நோக்கி இழுத்து வந்து கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி அருகே வந்த போது எதிர்பாராவிதமாக தோணியில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென அறுத்து விழுந்தது. இதையடுத்து தூத்துக்குடி அருகே கடலில் நங்கூரம் போடடு தோணியினை நிறுத்தினர். தொடர்ந்து தோணியில் இருந்தவர்கள் பழைய துறைமுகத்திற்கு சென்று பழுது பார்க்க அனுமதி கேட்டனர்.
ஆனால் பழைய துறைமுகத்திற்குள் தோணியை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் தோணியில் வந்தவர்கள் படகை சரி செய்ய முயன்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் நங்கூரத்தின் கயிறு அறுத்தி தோணி காற்று வீசும் திசையில் அடித்து செல்லப்பட்டது.
வேம்பார் அருகே உள்ள பச்சையாபுரம் கடல் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட தோணி அங்கு கரையோரம் தரை தட்டி நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கடல்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தரை தட்டி நின்ற தோணியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.