திருச்சியில் கோடீஸ்வரன், குஜராத்தில் “திருடன்”- போலீசில் மாட்டிய கில்லாடி கொள்ளைக்காரன்!
திருச்சி: குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கார்களில் செல்வோரின் கவனத்தை திசை திருப்பி கோடிக் கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்த திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவன் திருச்சியைச் சேர்ந்த ஜெகன் என்பதும், அங்கு கோடீஸ்வரனாக வாழ்ந்து வருவதும் காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் ஜெகன் தலைமையிலான கும்பல் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது.
கொள்ளைக் கும்பல்:
கீழே ஒரு பத்து ரூபாய் நோட்டைப் போட்டுவிட்டு, சொகுசு கார்களில் வருவோரிடம், கீழே பணம் இருப்பதாக ஒருவன் கூற, காரில் இருந்து அதன் உரிமையாளர் கீழே இறங்கி பணத்தை எடுக்கும் போது, மற்றொருவன் காருக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விடுவார்கள்.
ஜெகனின் கூட்டாளி:
ஜெகனின் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவனை அகமதாபாத் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் ஜெகன் பற்றி தகவல் கிடைத்து திருச்சிக்கு விரைந்து வந்தனர்.
அதிர்ச்சியான காவல்துறை:
அங்கு பல கோடி மதிப்புள்ள பங்களாவில் வசித்து வந்த ஜெகன்தான் திருடன் என்று தெரிந்ததும் காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சி. அவனது அக்கம் பக்கத்து வீட்டினருக்கும் ஜெகன் ஒரு திருடன் என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் திருடவில்லை:
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஜெகன் தமிழகத்தில் எந்த திருட்டையும் மேற்கொள்ளாததும், அவன் மீது தமிழகத்தில் ஒரு திருட்டு வழக்கு கூட இல்லை என்பதும்தான்.
சிறையில் அடைப்பு:
குஜராத் மாநிலத்தில் கொள்ளையடித்துவிட்டு, அந்த பணத்தைக் கொண்டு தமிழகத்தில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துள்ள ஜெகன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.