திராவிடக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர் கருணாநிதி.. குலாம் நபி புகழாரம்
Recommended Video
சென்னை: பாஜக, காங்கிரஸுடன் கூட்டணி வைத்த போதும் திராவிட கொள்கைகளை விட்டு கொடுத்ததில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.
"தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியது:
திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்.
தலைமை பண்புக்கு தலை சிறந்தவர் கருணாநிதி. எழுத்து, வசனம், திரைத்துறை என அனைத்திலும் சாதனை படைத்தவர். நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் போராடியவர். இந்திரா காந்தியை மீண்டும் பிரமராக்க 1980 ஆம் ஆண்டில் கூட்டணி அமைக்கப்பட்டது.
கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவராக நான் இருந்துள்ளேன். எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் அளித்தார். கருணாநிதிக்கு மிகவும் பிடித்தது எழுத்துதான். கூகுளில் யார் உலகின் மிகப்பெரிய கலைஞர் என தேடிபார்த்தேன்
தலைவர், எழுத்தாளர், கலைஞர் என பல துறைகளிலும் சிறந்தவர் கருணாநிதி மட்டுமே. எழுத்தாளர், கவிஞர், வசனகர்த்தா என திகழ்ந்து கலைஞர் என்ற பெயரை பெற்றவர். அவர் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி. மரணமடையும் வரை எழுதிக்கொண்டு இருந்தவர். உழவர் சந்தை, கூட்டுறவு கடன் தள்ளுபடிகள் உட்பட பல புரட்சிகர நடவடிக்கைகள் எடுத்தார்.
சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை என தென் மாநிலங்களில் முதலில் கேட்டவர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி சமூகநீதியை நிலை நாட்டியவர். மற்ற மாநிலங்களுக்கு முன்னதாக இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக செயல்படுத்தியவர்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அவர்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர். 33 வயதில், தமிழக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார். ஒவ்வொரு தசாப்தங்களிலும் முதல்வராக பதவி வகித்தவர் கருணாநிதிதான்.
21வது நூற்றாண்டு பிறந்தபோதும் அவர்தான் தமிழக முதல்வராக இருந்தார். 5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர். பதவிகள் பெருகியபோதும் கருணாநிதி ஒரு அறை கொண்ட சிறு வீட்டில்தான் வசித்தார்.
பாஜக, காங். இரு கட்சிகளுடனும் கருணாநிதி கூட்டணி வைத்தார், ஆனால் தனது கொள்கையை எப்போதும் விட்டு கொடுக்கவில்லை. இந்திய வரலாற்றில் 60களில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டிலும் முதல்வராக இருந்து தடம் பதித்தவர். எளிமையையும் நேர்மையையும் கருணாநிதி என்றைக்கும் கடைப்பிடித்தார்.
திராவிட இயக்க சித்தாந்த கொள்கைகள் மற்றும் சமூகநீதி கொள்கைகளில் ஒரு போதும் பின்வாங்காதவர். சோனியா காந்திக்கு, கருணாநிதி ஒரு தந்தையை போன்றவர்.
எமெர்ஜென்சியை மீண்டும் கொண்டு வர மாட்டேன் என கூறினார் இந்திரா காந்தி. எமெர்ஜென்சி மோசமானதாக இருந்திருக்கலாம். ஆனால் அதைவிட மோசமான நிகழ்வுகள் இப்போது நடக்கின்றன. கருணாநிதி மட்டும் உடல்நலத்தோடு இருந்திருந்தால் பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார். அநீதி, கூட்டு படுகொலைகள், போராட்ட குரல்கள் ஒடுக்கப்படுவதை கருணாநிதி எதிர்த்திருப்பார்.
நீதித்துறை, பாராளுமன்ற ஜனநாயக குரல்கள் இப்போது நெரிக்கப்படுகின்றன. ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் மரபுகளை மீறி மசோதாக்களை நிறைவேற்றுகிறது. எமெர்ஜென்சிக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுத்ததை போல இப்போது ஸ்டாலின் முன்வர வேண்டும் என்றார் அவர்.