கூட்டணி பேச்சு: கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார் குலாம் நபி ஆசாத்?
சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சென்னை வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
சட்டசபைத் தேர்தல் கூட்டணியில் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸும் திமுக கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் இதுதொடர்பாக இதுவரை காங்கிரஸ் தரப்பிலிருந்து பெரிய தலைவர்கள் யாரும் கருணாநிதியையோ அல்லது திமுகவின் இதர முக்கியத் தலைவர்களையோ சந்திக்கவில்லை.
ராகுல் காந்தியிடம் ஆலோசனை
சமீபத்தில் ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தலைவர்களின் கருத்தைக் கேட்டறிந்தார்.
தமிழக தலைவர்களுக்கு ஓகேதான்
அப்போது திமுகவுடன் கூட்டணி அமைப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று பெரும்பாலான தலைவர்கள் ராகுல் காந்தியிடம் கூறினர். சிலர் மட்டுமே அதற்கு நேர் மாறாக கருத்து தெரிவித்தனர்.
கைவிடப்பட்ட நிலையில் காங்கிரஸ்
தற்போதைய நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியை சீந்துவார் யாரும் இல்லை. இந்த நிலையில்தான் திமுக அதுவாகவே நாங்க இருக்கோம் எங்க கிட்ட வாங்க என்று கூறி அதை அழைத்துள்ளது.
ஆஸாத் வருகிறாராம்
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் சென்னை வரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த தேர்தலைப் போலவே
கடந்த சட்டசபைத் தேர்தலிலும் திமுகவுடன்தான் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அப்போது கடுமையாக கெடுபிடி செய்து ஏகப்பட்ட இடங்களைக் கேட்டு வாங்கி திமுகவை கடுப்படித்தது என்பது நினைவிருக்கலாம்.
இப்போது கேட்ட சீக் கிடைக்க வாய்ப்பில்லை
இந்த முறை காங்கிரஸால் முன்பு போல கெடுபிடி செய்ய முடியாத நிலை. ஜி.கே.வாசன் கட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கும் சுத்தமாக பலம் இல்லை. தனியாக நின்றால் கட்சியின் கதி அதோ கதிதான். எனவே திமுக பார்த்துக் கொடுப்பதை வாங்கும் அளவில்தான் உள்ளது.
"பாஜக பேச்சு"க்கு மத்தியில்
எப்படி தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக திமுக தரப்பு பேசிக் கொண்டிருக்கிறதோ, அதேபோல பாஜகவுடனும் ஒரு ரகசியப் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. சுப்பிரமணியம் சாமியும் டிவீட் போட்டு பிரளயத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் காங்கிரஸ், திமுக இடையே பேச்சு நடைபெறவுள்ளது.
ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையாமே?
அதேசமயம், காங்கிரஸுடன் கூட்டணி சேருவதில் மு.க.ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸையும் கூட்டணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறாராம். மேலும் சில மூத்த தலைவர்களும் இதை ஆமோதிக்கின்றனராம்.