11ம் தேதி... கும்மிடிப்பூண்டி... "தமிழகத்தின் ஈசான மூலை" .. இம்முறையும் ராசியாகுமா "கேப்டனுக்கு"?
சென்னை: தமிழகத்தின் ஈசான மூலையாக கருதப்படும் கும்மிடிப்பூண்டி தொகுதி, கடந்த சில தேர்தல்களில் தேமுதிகவுக்கு ராசியான தொகுதியாக இருந்து வந்துள்ளது. எனவே, இம்முறையும் அங்கிருந்தே தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் முதல் தொகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அமைந்துள்ளது.
தமிழகத்தின் நுழைவு வாயிலாக, ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ள இத்தொகுதியில் தெலுங்குப் பேசும் மக்கள் அதிகம்.
ராசியான தொகுதி...
தமிழகத்தின் முதல் சட்டசபைத் தொகுதியான இதையே தனது ராசியான தொகுதியாக கருதுகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இது அவரது தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளது.
முதல் கூட்டம்...
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி தேமுதிகவைத் தொடங்கினார் விஜயகாந்த். தனது கட்சியின் முதல் கூட்டத்தை அதே ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கும்மிடிப்பூண்டியில் தான் ஆரம்பித்தார்.
அதிமுக கூட்டணியிலும்...
அதனைத் தொடர்ந்து கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த விஜயகாந்த், கும்மிடிப்பூண்டி தொகுதியை கேட்டு வாங்கி, போட்டியிட்டார். முன்னதாக அது அதிமுக வேட்பாளர் கோபால் நாயுடு என்பவருக்காக அறிவிக்கப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து...
அந்தத் தேர்தலில் பெற்ற வெற்றியால் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து கிடைத்தது விஜயகாந்திற்கு. இதனால் கும்மிடிப்பூண்டி தேமுதிகவின் ராசியான தொகுதியானது.
மக்களுக்காக மக்கள் பணி...
இதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு தேமுதிக தொடங்கிய ‘மக்களுக்காக மக்கள் பணி' என்ற நலத்திட்டத்தையும் கும்மிடிப்பூண்டியிலேயே விஜயகாந்த் தொடங்கினார். அதன்பின்னரே அத்திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம்...
இந்நிலையில், அடுத்தமாதம் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியின் மாநாடு மாமண்டூரில் நடந்தபோதும், தேமுதிகவின் தேர்தல் பிரச்சாரத்தை இம்முறையும் கும்மிடிப்பூண்டியில் தான் விஜயகாந்த் தொடங்கினார்.
11ம் தேதி செண்டிமெண்ட்...
கட்சி தொடங்கிய போது, டிசம்பர் 11ம் தேதி தனது முதல் பொதுக்கூட்டத்தை கும்மிடிப்பூண்டியில் நடத்தினார் விஜயகாந்த். அதேபோல், இம்முறையும் கடந்த 11ம் தேதி கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் அவர். இதனால், கும்மிடிப்பூண்டியோடு சேர்ந்து 11ம் தேதியும் விஜயகாந்திற்கு வெற்றி வாய்ப்பை அள்ளித்தரும் ராசியாக கருதப்படுகிறது.
நம்பிக்கை...
எனவே, கூட்டணிக் கட்சிகளிடமிருந்து இம்முறையும் தேமுதிக தனது ராசியான தொகுதியான கும்மிடிப்பூண்டியைப் பெறும் என நம்பப்படுகிறது. வழக்கம்போல, இம்முறையும் விஜயகாந்த் எதிர்பார்க்கும் வெற்றியை கும்மிடிப்பூண்டி பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.