காதல் பிரச்சனையால் துப்பாக்கி சூடு... நெல்லையில் பதற்றம்
காதல் பிரச்சனையால் நெல்லையில் துப்பாக்கி சூடு நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி: வள்ளியூர் அருகே காதல் பிரச்சனையால் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வள்ளியூர் அருகே குமாரபுதுகுடியிருப்பை சேர்ந்தவர் ராஜ். இவர் மினிபஸ் சர்வீஸ் நடத்தி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் சுடலை வடிவு என்பவரின் மகன் சிவக்குமார் (48), அவருடய மனைவி சுசீலா. இவர்களுக்கு இசக்கிமுத்து (23) என்ற மகன் உள்ளார். இவர் ராஜின் மகளை காதலித்து வந்தார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று ராஜின் மகள் திருமண விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவின் போது, ராஜிக்கும் சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சிவக்குமாரை அவரது மனைவி சுசீலா மற்றும் உறவினர் சுரேஷ் ஆகியோர் சமாதானம் செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, இவர்களை பின் தொடர்ந்து ராஜ் வந்துள்ளார். அப்போது அவருடன் அவரது மகன் சிம்சன், உறவினர் சேகர் ஆகியோரும் உடன் வந்துள்ளனர். அப்போது சரியான நேரம் பார்த்து சுரேஷை அவர்கள் அரிவாளால் வெட்டினர். பின்னர் சிவக்குமாரையும், சுசீலாவையும் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டனர்.
காயமடைந்த சுரேஷ், சிவக்குமார், சுசீலா ஆகியோர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் ராஜ், சிம்சன், சேகர் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கி சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது.