காஷ்மீர் பிரச்சனை.. துப்பாக்கி மூலம் தீர்வு வராது.. திமுக எம்பி திருச்சி சிவா
டெல்லி: காஷ்மீர் பிரச்சனைக்கு துப்பாக்கியின் மூலம் தீர்வு ஏற்படாது என்று அனைத்துக் கட்சிக் குழுவில் பங்கேற்று காஷ்மீர் சென்று விட்டு டெல்லி திரும்பியுள்ள திமுக எம்பி திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் நடந்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கொண்ட குழு காஷ்மீர் சென்று ஆய்வு செய்துவிட்டு வந்தது. அதுதொடர்பான அறிக்கையும் இன்று தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற்ற திமுக எம்பி திருச்சி சிவா, காஷ்மீர் பயணம் குறித்தும் கலவரம் குறித்தும் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவு சில இடங்களில் இருந்தாலும் கல்லெறி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. காஷ்மீரில் தற்போது உருவாகியுள்ள பிரச்சனை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் பரவி வருகிறது. காஷ்மீர் கிராமத்து மக்கள் கும்பலாக நின்று கொண்டு பாதுகாப்புப் படையினர் மீது கற்களை எறிந்து தாக்குதல்கள் நடத்துகின்றனர். இது குறித்து மக்களிடம் பேசிய போது, பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளால் தங்களை தாக்குவதாக தெரிவிக்கின்றனர்.
அனைத்துக் கட்சிக் குழுவினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரிடம் மனம் திறந்து பேசினோம். அவர்களும் அவர்களுடைய பிரச்சனைகளை எங்களிடம் எடுத்துரைத்தார்கள். குறிப்பாக வியாபாரிகள் எங்களிடம் பேசும் போது, காஷ்மீரில் கலவரம் நடந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் வருவதே கிடையாது. ஒருநாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் விற்பனையான கடைகளில் இப்போது சில நூறு ரூபாய்கள் விற்பனையாகின்றன என்று கூறினார்கள்.
இது ஒருபுறம் இருக்க, பிரிவினைவாதக் குழுக்கள் எங்களை சந்திக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். ஹுரியத் அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை மறுத்துவிட்டனர். இதுகுறித்தும் ஒரு அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அனைத்துக் கட்சி குழு அளிக்க உள்ளது.
காஷ்மீர் பிரச்சனை என்பது நீண்ட நாள் பிரச்சனை. அது புதிதாக இன்று உருவானதல்ல. இங்கு பிரச்சனைகள் உருவாகும் போதெல்லாம் மத்திய மற்றும் மாநில அரசு தலையிட்டு தற்காலிகமான தீர்வை முன் வைக்கின்றனர். பின்னர், பிரச்சனை மீண்டும் தலை தூக்குகிறது.
மக்களிடம் பேசி அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது, ராணுவத்தின் மூலமும் துப்பாக்கிக் குண்டுகள் மூலமும் பிரச்சனைகளை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பது விளங்குகிறது. காஷ்மீர் வீதிகளில் ஆயுதம் தாங்கிய காவலர்கள், ஆள்நடமாட்டம் இல்லாத வீதிகள், வெறிச்சோடிக் கிடைக்கும் கடைகள், கோபமாகத் திரியும் இளைஞர்கள் என்ற நிலை மாறி பரபரப்பான வீதிகள், சுற்றுலாப் பயணிகள், அங்கிருக்கும் ஆண்களும், பெண்களும் கையில் குல்மோகர் மலர்களோடு நடமாடும் சூழல் வர வேண்டும் என்று திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.