கரூரில் வாழைத்தோப்பில் சிக்கிய துப்பாக்கி டெலஸ்கோப்
கரூர்: கரூர் அருகே ஒரு வாழைத்தோப்பில் துப்பாக்கியில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய டெலஸ்கோப், லென்ஸ், அதை பயன்படுத்துவது தொடர்பான குறிப்புகள் அடங்கிய கைடு ஆகியவை அடங்கிய ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரூர் அருகே, குளித்தலையில் உள்ள ரயில்வே நிலையத்தில் அருகில் உள்ள வாழைத்தோப்பில் ராணுவப் பாதுகாப்பு படை அல்லது துப்பாக்கி தொழிற்சாலையில் பயன்படுத்தக்கூடிய டெலஸ்கோப் மற்றும் அதை துப்பாக்கியில் எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான கைடு புத்தகங்கள் அடங்கிய 13 பெட்டிகள் அடங்கிய ஒரு மிகப்பெரிய பெட்டி இன்று காலை இருந்ததை அப்பகுதி மக்கள் வயலுக்கு சென்ற போது பார்த்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செந்தில் மற்றும் பிரகாஸ்குமார் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அப்பெட்டியை மீட்டனர்.
பெட்டியின் மேல் பகுதியில் இந்தியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பெட்டியை ரயில்வே போலீஸார் கைப்பற்றி ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் எஸ்.பி.ஜோஸி நிர்மல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.