தொடர் மழை... வேகமாக நிரம்பி வரும் குண்டாறு அணை
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குண்டாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் இரண்டாவது வாரத்தில் துவங்கியது. இதையடுத்து மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் கார்பருவ சாகுபடிக்காக திறந்து விடப்பட்டது. விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து இருந்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
செங்கோட்டை அருகே அமைந்துள்ள குண்டாறு, அணை 36.10 அடி கொள்ளவு கொண்டது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 32.12 அடியாக உயர்ந்தது. இந்த அணைப்பகுதியில் 2 மிமீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், பாபநாசம் அணை நீர்மட்டம் 79.05 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 86.84 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 71.55 அடியாகவும் உள்ளது.
பிற அணைகளில் மழை இல்லை. நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் விவசாயிகள் கார் பருவ நெல் சாகுடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை தொடரும் பட்சத்தில் பிற அணைகளிலும் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது.