அதிர்ச்சிச் செய்தி.. நெடுவாசல், கதிராமங்கலத்துக்காக போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம்!
ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : இயற்கை காப்போம் என்றும் பிரச்சாரத்துடன் களமிறங்கி மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகக் போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுவோருக்கு பெரும் அதிர்ச்சிச் செய்தியாக இது வந்து சேர்ந்துள்ளது. சேலம் போலீஸார் வளர்மதியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இவர் மீது நக்சலைட் இயக்கத்திற்கு ஆதரவாக ஆள் சேர்ப்பதாக போலீஸார் புகார் கூறியுள்ளனர்.
சேலம் வளர்மதி
சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தார்.
13ம் தேதி கைது
இவர் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி சேலம் போலீசார் கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாணவி வளர்மதி மீது இன்று திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கோவை சிறையில் அடைப்பு
இதனையடுத்து சேலம் சிறையில் இருந்து மாணவி வளர்மதியை கோவைக்குக் கொண்டு வந்துள்ள அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர் போலீஸார்.
திருமுருகன் காந்தியைத் தொடர்ந்து
சென்னை மெரீனா கடற்கரையில் இலங்கைத் தமிழர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்றதால் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.