வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஸ்டேடியத்திற்கு எப்படி அழைத்து செல்வது என ஆலோசனை!
சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியையொட்டி அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது தமிழக பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 3 வரை மத்திய அரசுக்கு வரைவு செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழகத்திற்கு பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் தெரிவித்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை காலம் தாழ்த்தும் முடிவாகவே இது அமைந்துள்ளது என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல்லுக்கு எதிர்ப்பு குரல்
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு, போராட்டங்கள் அமைதி வழியில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே காவிரி உரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அனைவரின் கவனத்தை திசை திருப்பும் விதமாக சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று வேல்முருகன், தமிமுன் அன்சாரி, தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள்
எதிர்ப்புகளை மீறி ஐபிஎல் போட்டி நடத்தினால் ஸ்டேடியத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை சிறைபிடிப்போம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திற்கள் ரசிகர்கள் கருப்புக் கொடி காட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும் என்றும் சில ஆலோசனைகள் கூறப்பட்ட நிலையில் ஸ்டேடியத்திற்குள் செல்ல ரசிகர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
போலீஸ் கண்காணிப்பு வளையத்திற்குள்
ஸ்டேடியத்திற்குள் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லக் கூடாது, பேனர்களைக் கொண்டு செல்ல தடை. எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள், வெளிஉணவு, தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டள்ளது. ரசிகர்களை கண்காணிக்க ரகசிய கேமிரா பொருத்தப்பட்டுள்ளதோடு, ஸ்டேடியம் மற்றும் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல் என 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீரர்களுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள்
கிரிக்கெட் வீரர்கள் வெளியே ஷாப்பிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கி இருக்கும் ஆழ்வார்கேட்டை கிரவுன் பிளாசா ஓட்டல் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நேற்று பயிற்சிக்காக வீரர்கள் தனித்தனி காரில் போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டேடியத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
வீரர்களை எப்படி அழைத்து செல்வது?
இந்நிலையில் இன்று மாலை ஐபிஎல் போட்டிக்காக ஓட்டலில் இருந்து கிரிக்கெட் வீரர்களை பாதுகாப்பாக எவ்வாறு ஸ்டேடியத்திற்கு அழைத்து செல்வது என்று தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தனித்தனி காரில் வீரர்களை பாதுகாப்புடன் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து செல்வதா அல்லது வீரர்களுக்கான பேருந்துகளிலேயே பாதுகாப்பாக அழைத்து செல்வதா என்று கிரிக்கெட் வாரியம் காவல்துறையினருடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.